நிலக்கடலை உற்பத்தி முறைகள்!

நிலக்கடலை groundnut

ண்ணெய் வித்துகள், மக்களின் அன்றாட வாழ்வின் உணவிலும், மற்ற பயன்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், காலவோட்டத்தில் வித்துப் பயிர்கள் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. நமது நாட்டில் எண்ணெய் வித்துகளில் முதலிடத்தில் இருக்கும் நிலக்கடலை, ஒரு பணப் பயிராகவும் கருதப்படுகிறது. எனவே, நிலக்கடலைப் பயிரில் உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தேவையான தொழில் நுட்பங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

நிலம் தயாரித்தல்

மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலம் ஆகியன, நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை. இவ்வகை நிலங்களை முதலில் சட்டிக் கலப்பை மூலம் உழ வேண்டும். பிறகு, நிலம் புழுதியாகும் வரை, இரும்புக் கலப்பை அல்லது மரக்கலப்பை மூலம் 3-4 முறை உழ வேண்டும்.

கடின மண்ணடுக்கை உடைத்தல்

குறைந்த ஆழத்தில் கடின மண்ணடுக்குள்ள நிலத்தை, உளிக் கலப்பையால் 50 செ.மீ. இடைவெளியில் ஒரு திசையிலும், பிறகு அதற்கு எதிர்த் திசையிலும் உழ வேண்டும். இந்த உழவு முறையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். பிறகு, எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது நன்கு மட்கிய தென்னைநார்க் கழிவை அடியுரமாக இட வேண்டும்.

பாத்திகள் அமைத்தல்

நீரின் அளவு, நிலச்சரிவு மற்றும் மண் வகையைப் பொறுத்து, 10 முதல் 20 ச.மீ. அளவில் பாத்திகளை அமைக்கலாம். இதற்கு, டிராக்டரில் இணைக்கப்பட்ட பாத்தி அமைப்பானைப் பயன்படுத்தலாம். அல்லது 60 செ.மீ. இடைவெளியில், 6 மீ. நீளத்தில் பார்களையும், அவற்றின் குறுக்கே பாசன வாய்க்கால்களையும் அமைத்து, பார்களின் இரு பக்கமும் விதைக்கலாம்.

பருவம்

மானாவாரி விதைப்புக்கு ஆடிப்பட்டமும், கார்த்திகைப் பட்டமும் ஏற்றவை. இறவை சாகுபடிக்கு, மார்கழிப் பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப் பட்டம் ஆகியன ஏற்றவை. 30×10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். பொதுவாக ஏக்கருக்கு 50 கிலோ விதைகள் தேவைப்படும். விதை பெரிதாக இருந்தால், 15 சத விதைகள் கூடுதலாகத் தேவைப்படும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் திரம் அல்லது 4 கிராம் மாங்கோசெப் அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் வீதம் எடுத்துக் கலந்து விதைக்கலாம். அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து விதைக்கலாம். இப்படி நேர்த்தி செய்த விதைகளைப் பூசணக் கொல்லிகளுடன் கலக்கக் கூடாது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் தயாரிப்பான த.வே.ப.க.14 ரைசோபியம் 200 கிராம் மற்றும் 200 கிராம் பாஸ்போபாக்டீரியாவை, ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து, அதில் விதைகளை நேர்த்தி செய்ய வேண்டும். இப்படி நேர்த்தி செய்யாத நிலையில், ஏக்கருக்கு நான்கு பொட்டலம், அதாவது 800 கிராம் ரைசோபியம், 800 கிராம் பாஸ்போபாக்டீரியாவை, 10 கிலோ தொழுவுரம், 10 கிலோ மணலில் கலந்து, விதைப்புக்கு முன் நிலத்தில் இட வேண்டும்.

விதைப்பு

இந்த விதைகளை, கோவை விதைப்பான் அல்லது கொரு அல்லது விதைப்புக் கருவி மூலம் 4 செ.மீ. ஆழத்தில் வரிசையாக விதைக்க வேண்டும். குழிக்கு ஒரு விதை வீதம் இட வேண்டும். விதைத்த விதைகளை, காக்கை, அணில்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். விதைத்துப் பத்து நாட்களுக்குப் பிறகு சரியான ஈரப்பதம் இருப்பின் பயிர்  எண்ணிக்கையைச் சீர் செய்ய வேண்டும்.

சத்து மேலாண்மை

மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு, அடியுரமாக 5 கிலோ யூரியா, 9 கிலோ டி.ஏ.பி,, 30 கிலோ பொட்டாஷை இட வேண்டும். மேலும், 5 கிலோ நுண்சத்துக் கலவையையும், 160 கிலோ ஜிப்சத்தையும் இட வேண்டும்.

இறவை சாகுபடியில், ஏக்கருக்கு 45 கிலோ டி.ஏ.பி., 25 கிலோ பொட்டாசை அடியுரமாக இட வேண்டும். இருபதாம் நாளில் முதல் மேலுரமாக, 6 கிலோ யூரியா, 12.5 கிலோ பொட்டாஷை இட வேண்டும். அடுத்து, நாற்பதாம் நாளில் இரண்டாம் மேலுரமாக, 6 கிலோ யூரியா, 12.5 கிலோ பொட்டாஷை இட வேண்டும். மேலும், 5 கிலோ நுண்சத்துக் கலவையையும், 160 கிலோ ஜிப்சத்தையும் இட வேண்டும்.

சத்துக் கலவைத் தெளிப்பு

பெரிய பருப்புகளைக் கொண்ட இரகங்களின் காய்களில் பருப்பு வளர்ச்சிக் குறைபாடு என்பது பெரிய இடர்ப்பாடு ஆகும். இதைத் தவிர்த்து நல்ல தரமான பருப்புகளைப் பெறுவதற்கு, பல்வேறு சத்துகளைக் கலந்து தெளிக்க வேண்டும். அதாவது, ஒரு ஏக்கருக்குத் தேவையான இந்தக் கலவையைத் தயாரிக்க, டிஏபி 1 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், போராக்ஸ் என்னும் வெண்காரம் 200 கிராம்,

பிளானோபிக்ஸ் 140 மி.லி. ஆகியவற்றை, 200 லிட்டர் நீரில் கலந்து, விதைத்த 25 மற்றும் 35 நாளில் தெளிக்க வேண்டும். அல்லது ஏக்கருக்கு 2 கிலோ நிலக்கடலை ரிச் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து, விதைத்த 35 மற்றும் 45 நாளில் தெளிக்க வேண்டும்.

ஜிப்சம் இடுதல்

ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் வீதம் எடுத்து, விதைத்த 40-45 நாட்களில், செடிகளின் ஓரத்தில் இட்டு மண்ணை அணைத்து விட வேண்டும். அப்போது மண்ணில் ஈரப்பதம் இருப்பது அவசியமாகும். கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுவது நல்ல பலனைத் தரும். இந்த ஜிப்சத்தில் பாதியை இரசாயன உரங்களுடன் கலந்து அடியுரமாக இட்டால், நூற்புழுக்களால் ஏற்படும் காளஹஸ்தி மெலடி மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறியைக் குறைக்க முடியும்.

களைக் கட்டுப்பாடு

ஏக்கருக்கு 1.30 லிட்டர் பென்டிமித்திலின் வீதம் எடுத்து 200 லிட்டர் நீரில் கலந்து, விதைத்த மூன்றாம் நாள் தெளிக்க வேண்டும். களைகள் முளைத்த பிறகு ஏக்கருக்கு 0.300 லிட்டர் இமாசித்தோபைர் வீதம் எடுத்து 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இந்தக் களைக்கொல்லியைத் தெளிக்கும் போது நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும். களைக்கொல்லியைத் தெளிக்காத நிலத்தில், விதைத்த 20 மற்றும் 40 நாளில் என, இருமுறை கைக்களை எடுக்கலாம்.

நீர் நிர்வாகம்

மணிலாச் செடிகளின் வளர்ச்சியை, முளைக்கும் பருவம் 1-10 நாட்கள், வளர்ச்சிப் பருவம் – 11-25 நாட்கள், பூக்கும் பருவம் 25-45 நாட்கள், கம்பி இறங்கிக் காய்கள் பிடிக்கும் பருவம் 46-80 நாட்கள், முதிர்ச்சிப் பருவம் 81-105 நாட்கள் என, ஐந்து பருவங்களாகப் பிரிக்கலாம். இந்த ஒவ்வொரு பருவத்திலும், மண்ணின் தன்மையைப் பொறுத்து, ஒன்று அல்லது இரண்டு முறை பாசனம் செய்ய வேண்டும்.

பூப்பின் போதும், காய்கள் உருவாகும் போதும், 0.5 சத அளவில் பொட்டாசிய குளோரைடைத் தெளித்தால் நீர்த் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம். தெளிப்பு முறை பாசனம் மூலம் 30 சதம் வரை நீரைச் சேமிக்க முடியும். இலேசான மண்ணுள்ள நிலமெனில் பாத்தியோரப் பாசனம் செய்யலாம். முளைத்தல், பூத்தல், காய்ப் பிடித்தல் ஆகிய பருவங்களில் பாசனம் மிகவும் அவசியம்.

அறுவடை

கால அளவைப் பொறுத்துச் செடிகளைக் கண்காணிக்க வேண்டும். முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல், மேல் இலைகள் மஞ்சளாதல் ஆகியன முதிர்ச்சியைக் குறிக்கும். மேலும், ஆங்காங்கே ஒருசில செடிகளைப் பிடுங்கி, காய்களை உரித்துப் பார்க்க வேண்டும். அப்போது, ஓட்டின் உட்புறம் வெள்ளையாக இல்லாமல், கரும்பழுப்பு நிறத்தில் இருந்தால், அது முதிர்ச்சி நிலையைக் குறிக்கும்.

அறுவடைக்கு முன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். அறுவடைக்கு எளிதாக இருக்கும் ஈரப்பதத்தில் செடிகளைப் பிடுங்க வேண்டும். பிடுங்கிய செடிகளைக் குவித்து வைக்கக் கூடாது, ஏனெனில், ஈரப்பதத்தில் காய்கள், குறிப்பாகக் கொத்து இரங்களைச் சேர்ந்த காய்கள் முளைக்கத் தொடங்கி விடும். செடிகளில் இருந்து காய்களைப் பிரிக்க, நிலக்கடலைப் பிரிப்பானைப் பயன்படுத்தலாம். பிரித்த காய்களை 4-5 நாட்கள் வரை வெய்யிலில் உலர்த்த வேண்டும்.


நிலக்கடலை PARTHIBAN 1

முனைவர் .பார்த்திபன், முனைவர் .இராமநாதன்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading