நோய்களைத் துரத்தும் மூலிகைகளின் இளவரசி!

மூலிகை Ocimum tenuiflorum 24 08 2012 Copy e1629110667722

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019

னது சின்னஞ்சிறிய இலைக்குள், பல நோய்களுக்கான தீர்வை நிரப்பி வைத்திருப்பது துளசி. துள என்றால் ஒப்பு. சி என்றால் இல்லாதது. ஆக, துளசி என்றால் ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் மற்றொரு பெயர் பிருந்தை. இதில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

மூலிகைகளின் அரசி

துளசி பல நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் தான் இதைத் மூலிகைகளின் அரசி என்கிறோம். வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவில் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடைக் கிரகித்துப் பிராண வாயுவை வெளியேற்றுகிறது. இதை மற்ற தாவரங்கள் செய்வதற்கும் துளசி செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. இதிலுள்ள மருத்துவக் குணமிக்க பொருள்கள் வளிமண்டல மாசைச் சுத்திகரிக்கின்றன. துளசி இருக்குமிடத்தில் கொசுக்கள் வராது.

காய்ச்சல்

எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் துளசியிடம் இருக்கிறது தீர்வு. உலகளவிலான மருத்துவ ஆய்வாளர்கள் ஏற்கெனவே வைரஸ் காய்ச்சல், மூளைக்காய்ச்சலுக்குத் துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். 10 துளசியிலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீரில் கலந்து, அதை அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடிப்பதுடன், கொஞ்சம் எலுமிச்சைச் சாற்றையும் குடித்து விட்டு, கம்பளியால் உடலை நன்கு மூடிப் படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட, படிப்படியாகக் குறையும்.

இருமல்

உடலில் வெப்பத்தை உண்டாக்கிக் கோழையை அகற்றுவதுடன், உடலின் உள்வெப்பத்தையும் துளசி ஆற்றும். துளசிச் சாறுடன் கொஞ்சம் தேனைக் கலந்து கொடுத்தால் குழந்தைகளின் சளி, இருமல் குணமாகும். இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் இதிலுள்ளன.

இரத்தழுத்தம்

தினமும் சில துளசியிலைகளைத் தின்றாலே சர்க்கரை கட்டுப்படும். துளசிச் சாற்றையும், எலுமிச்சைச் சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்குப் பின்பு உண்டு வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும். துளசியிலை, முற்றிய முருங்கை இலைகளை சமமாக எடுத்து 50 மில்லி சாற்றைப் பிழிந்து, அதில் 2 சிட்டிகைச் சீரகப்பொடியைச் சேர்த்து, காலை, மாலையில் 48 நாட்கள் சாப்பிட்டால் இரத்தழுத்தம் குறையும். இதைச் சாப்பிடும் காலத்தில் உட்பு, புளி, காரத்தைக் குறைக்க வேண்டும்.

தோல் நோய்

துளசியிலையை எலுமிச்சைச் சாறு விட்டு விழுது போல் அரைத்துப் பற்றுப் போட்டால், சொரி, சிரங்கு குணமாகும். துளசியிலையுடன், அம்மான் பச்சரிசி இலையைச் சமமாக எடுத்து அரைத்துத் தடவினால் பருக்கள் மறையும்.

என்றும் இளமை

என்றும் இளமையுடன் திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான செம்புப் பாத்திரத்தில் கொஞ்சம் நன்னீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து, பின்பு அந்நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல் சுருக்கம் நீங்கி நரம்புகள் பலப்படும். பார்வைக் குறை நீங்கும்.

உடலுக்கான கிருமிநாசினி

மனித உடலுக்கான கிருமிநாசினியாகப் பயன்படுகிறது துளசி. தினமும் துளசியிலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் வாழ்நாள் முழுக்க வராது. உடலில் வியர்வை வாடையுடன் இருப்பவர்கள், குளிக்கும் நீரில் முதல் நாளே துளசியிலைகளை ஊற வைத்துக் குளித்தால், வியர்வை நாற்றம் போய்விடும். மொத்தத்தில் துளசியிலையைத் தினமும் தின்றால் அல்லது குடிநீரில்  போட்டுக் குடித்தால் பல நோய்களை விரட்டலாம்.


மூலிகை SATHISH G 2

முனைவர் கோ.சதிஸ்,

முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் மு.சபாபதி,

வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர்-602025.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!