தினை சாகுபடி முறைகள்!

தினை HEADING PIC 11 scaled

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018

லகில் பயிரிடப்படும் மிகவும் பழைமையான உணவுப் பயிர்களில் தினையானது இரண்டாம் இடத்தில் உள்ளது. நீண்ட நெடுங்காலமாகச் சீனர்களும் இந்தியர்களும் தினையைப் பயிரிட்டு வந்துள்ளனர். இதில் தமிழர்கள் இன்னும் சிறப்பாக, தமிழ்க்கடவுள் எனப்படும் முருகனுக்குத் தேனையும் தினைமாவையுமே முக்கியப் பிரசாதப் பொருளாகப் படைக்கின்றனர்.

நூறு கிராம் தினையில், புரதம் 12.3 கிராம், கொழுப்பு 4.3 கிராம், நார்ச்சத்து 8.0 கிராம், தாதுப்பு 3.3 கிராம், சுண்ணாம்பு 31 மில்லி கிராம், பாஸ்பரஸ் 290 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.8 மில்லி கிராம் உள்ளன. பாஸ்பரஸ் மிகுந்துள்ள சிறுதானியம் தினை மட்டுமே. எனவே, தினையைத் தினமும் சாப்பிட்டால், நீரிழிவு நோய், உடல் கனம், மலச்சிக்கல் போன்றவற்றில் இருந்து எளிதில் விடுபடலாம்.

பரப்பளவும் உற்பத்தியும்

தமிழகத்தைப் பொறுத்தவரையில், தினையின் மொத்தப் பரப்பளவில் சேலம் மாவட்டத்தில் 40% பயிரிடப்படுகிறது. அதேபோல் உற்பத்தியில் 28% உள்ளது. உற்பத்தித் திறனில் சராசரியாகத் தமிழகம் எக்டருக்கு 470 கிலோ என்னும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் எக்டருக்கு 841 கிலோ என்னுமளவில் முதலிடம் வகிக்கிறது.

காலநிலை மற்றும் பருவம்

வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பயிரிட ஏற்றது தினை.  தமிழகத்தில் பருவமழைக்கு ஏற்ப, மானாவாரியில் ஆடிப்பட்டம், அதாவது, ஜூன் ஜூலையிலும், புரட்டாசிப் பட்டம் அதாவது, செப்டம்பர் அக்டோபரிலும் பயிரிடலாம். சராசரியாக 450-500 மி.மீ. மழையுள்ள இடங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. பாசன வசதியிருந்தால் அனைத்துப் பட்டங்களிலும் பயிரிடலாம்.

கோடையுழவு

கோடை மழையைப் பயன்படுத்திப் பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை, சட்டிக் கலப்பையால் ஆழமாக உழ வேண்டும். பின்னர் இரண்டு முறை மரக்கலப்பையால் உழ வேண்டும். கோடையுழவால் மண்ணரிப்புத்  தடுக்கப்படுகிறது; மழைநீர் சேமிக்கப்படுகிறது; கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; பூச்சி மற்றும் நோய்களும் கட்டுப்படுகின்றன.

நிலத் தயாரிப்பு

கோடை மழையைப் பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை உளிக்கலப்பை அல்லது சட்டிக் கலப்பையால் ஆழமாக உழ வேண்டும். பின்னர் கட்டியில்லாமல் 2 அல்லது 3 முறை  உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன்பு எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரத்தைச் சீராக இட வேண்டும்.

ஊடுபயிர்

பொதுவாகத் தமிழகத்தில் தனிப்பயிராகவே தினை பயிரிடப்படுகிறது. உறுதியான விளைச்சல், கூடுதல் இலாபம், மண்வளம் காத்தல் ஆகிய இலக்குகளை அடைய ஊடுபயிர் அவசியமாகிறது. தினையுடன் ஊடுபயிராகத் துவரை, அவரை, பேயெள், கடுகு ஆகியவற்றில் ஒன்றை, எட்டு வரிசைத் தினைக்கு இரண்டு வரிசையில் ஊடுபயிராகப் பயிரிடலாம். 25க்கு10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். அதாவது, சதுர மீட்டருக்கு 40 பயிர்கள் இருக்க வேண்டும். வரிசை விதைப்புக்கு எக்டருக்கு 10 கிலோ, பாரம்பரிய விதைப்புக்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி 

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம். உயிரியல் விதை நேர்த்திக்கு, ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் கலவை 10 கிராம்  மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் நன்கு கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்

நுண்ணுயிர் உர விதை நேர்த்திக்கு, ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை, 600 கிராம் அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போபாக்டீரியாவுடன் நன்கு கலக்க வேண்டும். இரசாயன விதை நேர்த்திக்கு, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் அல்லது 4 கிராம் திரம் வீதம் கலக்க வேண்டும்.

உர நிர்வாகம்

பொதுவாக மண்ணாய்வு முடிவுக்கு ஏற்ப உரமிடுதல் அவசியம். மண்ணாய்வைச் செய்யாவிடில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவான, எக்டருக்கு 40:20:20 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்துகளை, கீழே சொல்லியுள்ளபடி இட வேண்டும். அதாவது, தழைச்சத்தில் பாதியையும், மணி, சாம்பல் சத்து உரங்களை முழுமையாகவும் அடியுரமாக இட வேண்டும். மீதியுள்ள பாதி தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

அல்லது ஒரு எக்டருக்கு யூரியா 43 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 33 கிலோவை அடியுரமாக இட வேண்டும். மேலும் நுண்ணூட்டச் சத்துக் குறைகளைத் தவிர்க்க, எக்டருக்கு 12.5 கிலோ சிறுதானிய நுண்ணூட்டச் சத்துக் கலவையை 50 கிலோ மணலுடன் கலந்து, அடியுரமாக நிலத்தில் சீராகத் தூவ வேண்டும். தூவப்பட்ட உரத்தை நிலத்துடன் கலக்கக் கூடாது. யூரியா 43 கிலோவை, களையெடுத்த பிறகு 30 முதல் 45 நாட்களுக்குள் மேலுரமாக, மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது இட வேண்டும்.

ஈரப்பதம் காத்தல்

தமிழகத்தில் பருவமழைக் காலத்தில் மானாவாரிப் பயிராகவே தினையானது அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆகையால், சிறந்த மகசூலைப் பெற, மண்ணில் போதுமான ஈரப்பதம் இருத்தல் மிகவும் அவசியம். கோடையுழவு, உளிக்கலப்பையால் 3-5 மீட்டர் இடைவெளியில் உழுதல், நிலப்போர்வை அமைத்தல், நிலத்தின் நடுவே பண்ணைக் குட்டை அமைத்தல், சரிவுக்குக் குறுக்கே உழுது மழைநீரைச் சேமித்தல், நிலச்சரிவுக்குக் குறுக்கே வரப்புகளை அமைத்தல் போன்ற சிறந்த உழவியல் முறைகளைக் கையாண்டால் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து அதிக மகசூல் பெறலாம்.

களை நிர்வாகம்

உழவியல் முறை: விதைத்த 15 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு முறை கையினால் களையெடுக்க வேண்டும். வரிசை விதைப்பென்றால் களையெடுப்பானால் இரண்டு முறை களையெடுக்க வேண்டும்.

இரசாயன முறை: விதைத்த 3 முதல் 5 நாட்களில் எக்டருக்கு, ஐசோபுரோடியூரான் 0.50 கிலோ களைக்கொல்லி மருந்தை 500 லிட்டர் நீரில் கலந்து நேப்சேக் தெளிப்பான் மூலம், மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது தெளிக்க வேண்டும்.

அறுவடை

நன்கு முற்றிய கதிர்கள் காய்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும். பின்பு களத்தில் காய வைத்து அடித்து, தானியத்தைத் தனியாகப் பிரித்தெடுத்துச் சுத்தம் செய்து, சணல் அல்லது துணிப் பைகளில் சேமித்து வைக்க வேண்டும். இந்த முறைகளில் தினையில் உயர் விளைச்சல் இரகங்களைப் பயன்படுத்துவதாலும், சீரிய சாகுபடி முறையைக் கடைப்பிடிப்பதாலும், தமிழகத்தில் தோராயமாக எக்டருக்கு 1,855 கிலோ தானியமும், 5,138  கிலோ தட்டையும் மகசூலாகக் கிடைக்கின்றன.

சேமிப்பு

தினையை உணவுக்காகப் பயன்படுத்த, அதன் ஈரப்பதம் 10% இருக்கும் வகையில் நன்கு காய வைத்துச் சாக்குப் பைகளில் சேமிக்கலாம். இதையே விதைக்காகச் சேமிக்க, 100 கிலோ விதைக்கு 1 கிலோ ஆக்டிவேட்டடு கயோலினைக் கலக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல்-606603, திருவண்ணாமலை மாவட்டம்.


தினை PARASURAM

முனைவர் .பரசுராமன்,

முனைவர் க.சிவகாமி, முனைவர் கி.ஆனந்தி, சிறுதானிய மகத்துவ மையம்,

அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!