விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் (அட்மா) திட்டத்தின் கீழ், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள வள்ளிபுரத்தில், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்கு, காரீப் பருவப் பயிற்சி வழங்கப்பட்டது.

அப்போது, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம், நுண்ணீர்ப் பாசனத் திட்டம், பயிர்க் காப்பீடு மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டம் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

கபிலர்மலை, சின்ன கிணத்துப்பாளையம் இயற்கை விவசாயி மற்றும் சிறப்புப் பயிற்றுநர் லோகநாதன், இயற்கை விவசாயத்தின் நோக்கம், பயன்கள், சிறப்புகள் குறித்தும், மீன் அமிலம், அமிர்தக் கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், பூச்சி விரட்டி, நோய் விரட்டி தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் குறித்தும், விவசாயிகள் கேட்ட சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

நாமக்கல் மாவட்ட மண்ணாய்வு நிலைய, உயிரியல் கட்டுப்பாடு ஆய்வக வேளாண்மை அலுவலர் தரணியா, மண், நீர் மாதிரி, மண், நீர் ஆய்வின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்தும், உயிரியல் கட்டுப்பாடு ஆய்வகம் மூலம் வழங்கப்படும் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், ஒட்டுண்ணிகள் குறித்தும் விளக்கமளித்தார்.

உதவி வேளாண்மை அலுவலர் சதீஷ்குமார், துறை சார்ந்த மானியத் திட்டங்களை எடுத்துக் கூறினார். இயற்கை விவசாயி கலைவாணி, தனது பண்ணை அனுபவங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார். அட்மா திட்ட வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் இரமேஷ், அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

இந்தப் பயிற்சிக்கான ஏற்பாட்டைச் செய்திருந்த, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கவிசங்கர், ஹரிஹரன் ஆகியோர், பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உழவன் செயலியின் பயன்களை விளக்கியதுடன், பதிவேற்றம் செய்தும் கொடுத்தனர்.


செய்தி: நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!