சூரியக் கூடார உலர்த்தியின் பயன்கள்!

சூரியக் கூடார உலர்த்தி SOLARDRYER scaled

றுவடைக்குப் பிறகு விளை பொருள்களில் ஏற்படும் இழப்பைக் குறைக்க,  சுகாதார முறையில் விரைவாக உலர்த்தித் தரத்தை உறுதி செய்ய, விளை பொருள்களின் இருப்புக் காலத்தை அதிகரித்து, மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்று இலாபம் ஈட்ட, சூரியக் கூடார உலர்த்தி மிகவும் உகந்தது

சூரிய கூடார உலர்த்தியின் அமைப்பு

சூரியக் கூடார உலர்த்தியின் அளவு 4 மீட்டர் அகலம், 10 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் இருக்கும். இதன் போர்வை, புற ஊதாக் கதிர்களைத் தாங்கும் வகையில், 200 மைக்ரான் தடிமனுள்ள பாலிகார்பனேட் தகடால் ஆக்கப்பட்டிருக்கும். இந்தத் தகடு 25 ஆண்டுகள் வரை பயனில் இருக்கும். இதன் அதிகளவு வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸ் ஆகும்.

சூரியக் கூடார உலர்த்தியின் நன்மைகள்

சூரியக் கூடார உலர்த்தியில் விளை பொருள்களை உலர்த்தினால், உலர்த்தும் கால அளவு, கூலியாட்கள் செலவு, அறுவடைக்குப் பின் ஏற்படும் தேவையற்ற இழப்பு ஆகியன குறையும். விளை பொருள்கள் சுகாதார முறையில், இயற்கைத் தன்மை மாறாமல் உலர்வதால், அவற்றின் தரம் உறுதி செய்யப்படும். மேலும், பூஞ்சைகள் தாக்குவதும் தவிர்க்கப்படும்.

இதில் கொப்பரைத் தேங்காய் பூஞ்சைத் தொற்றின்றி உலர்வதால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சல்பர் போன்ற வேதிப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒரே சமயத்தில் 5,000 தேங்காய்கள் வரை உலர்த்தலாம். சூரியக் கூடார உலர்த்தியில் உலர்த்தப்படும் கொப்பரையில் கிடைக்கும் எண்ணெய், உயர் தரத்தில் இருக்கும். இந்த உலர்த்தியால் சுற்றுச்சூழல் மாசடைவதில்லை.

உலர்த்த உகந்த பொருள்கள்

கொப்பரைத் தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகள், வாழை, நெல்லிக்கனி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகள், மிளகாய், கிராம்பு, இஞ்சி உள்ளிட்ட பொருள்கள். முருங்கை, கறிவேப்பிலை, மூலிகைச் செடிகள், பாக்கு, தேயிலை, காப்பிக் கொட்டை ஆகியவற்றைச் சுகாதார முறையில் உலர்த்தலாம்.

இதற்கான மதிப்புக் கூட்டுதல் பயிற்சி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மூலமும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மூலமும் வழங்கப்படுகிறது.

வேளாண்மைப் பொறியியல் துறையின் திட்டம்

சூரியக் கூடார உலர்த்திகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், மானிய உதவியுடன் விவசாயிகளுக்கு அமைத்துத் தரப்படுகின்றன. விவசாயிகளின் தேவைக்கேற்பவும், இட வசதிக்கேற்பவும் 400 முதல் 1,000 சதுரடிப் பரப்பளவு வரை அமைத்துத் தரப்படுகின்றன. வேளாண்மைப் பொறியியல் துறையால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து இந்த உலர்த்தியைப் பெறலாம்.

மானிய விவரம்

சூரியக் கூடார உலர்த்தியை அமைப்பதற்கான முழுத் தொகையையும் முதலில் செலுத்தி விட வேண்டும். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட விவசாயி அல்லது விவசாயக் குழுவுக்கு மானியத் தொகை வழங்கப்படும். அதாவது, சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு, மொத்த விலையில் 40 சதம் அல்லது 3.50 இலட்ச ரூபாய், இவற்றில்  எது குறைவோ, அந்தத் தொகை, சம்பந்தப்பட்ட விவசாயியின் கணக்கில் மானியமாகச் செலுத்தப்படும்.

இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதம் அல்லது 3.00 இலட்ச ரூபாய், இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதம் மானியம் வழங்கப்படும்.

பயன் பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள், அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலகத்தை அணுகிப் பயன்  பெறலாம்.


சூரியக் கூடார உலர்த்தி KOKILAVANI

ச.கோகிலவாணி,

மனையியல் தொழில் நுட்ப வல்லுநர்,

ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் மையம்,

வாலிகண்டபுரம், பெரம்பலூர் – 621 115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!