நீர்ச் சேமிப்பில் உதவும் சொட்டுநீர்ப் பாசனம்!

சொட்டுநீர் 127612539 close up drip irrigation system water saving drip irri 00da4ae81d273fe8e725a092e47558f8

யிருக்குத் தேவையான நீரை, குறைந்த வீதத்தில், நீண்ட நேரம், மண்ணின் தன்மைக்கு ஏற்ப, சொட்டுவான்கள் மூலம், நேரடியாகப் பயிரின் வேரில் நாள்தோறும் தருவது, சொட்டுநீர்ப் பாசன முறை.

இம்முறையில், கிணற்று நீரை நன்கு திட்டமிட்டு, குழாய்கள் மூலம் பயிருக்கு எடுத்துச் செல்வதால், நீர்ச்சேதம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. பயிருக்குத் தேவையான அளவில், தேவையான நேரத்தில் நீர்க் கிடைப்பதால், பயிர் நன்கு செழித்து வளர்ந்து நல்ல மகசூலைத் தரும்.

நன்மைகள்

சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 20 முதல் 50 சதம் வரை மகசூல் கூடும். வரிசையில் நடப்படும் எல்லாப் பயிர்களுக்கும் இம்முறை ஏற்றது. பயிருக்குத் தேவையான அளவில், பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப, பாசன நீருடன் உரங்களை அளிக்கவும் உதவும். உரத்தின் பயன்படு திறன் இரு மடங்காக உயர்வதால், இரசாயன உரத்தேவை 30 முதல் 45 சதம் வரை குறையும். களை வளர்ச்சி முற்றிலும் கட்டுப்படும்.

சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள்

நீரேற்றும் இயந்திரம்: சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, கிணறுகளுக்கு, சென்ட்ரிப்யூகல் என்னும் மைய விலக்கு வகை இயந்திரமும், ஆழ்துளைக் கிணறுகளுக்கு, சப்மெர்சிபில் என்னும் நீர்மூழ்கி வகை நீரேற்று இயந்திரமும் ஏற்றவை.

கம்ப்ரெசர் என்னும் காற்றழுத்த முறையில் இயங்கும் நீரேற்று இயந்திரம், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப் பயன்படாது. இந்த இயந்திரம் மூலம் கிடைக்கும் நீரை, ஒரு தொட்டியில் சேமித்து வைத்து, பிறகு, மைய விலக்கு நீரேற்று இயந்திரம் மூலம் அளிக்கலாம்.

சொட்டுநீர் உரப் பாசனம்: இது, பாசன நீருடன் உரங்களைக் கலந்து விட்டு, சமச்சீராக அளிப்பதாகும். இப்படி உரத்தைத் தரும் போது, நீரும் உரமும் செடிகளின் வேர்ப்பகுதிக்கு நேரடியாகச் சென்றடையும். இதனால், செடிகளுக்கு வேண்டிய சத்துகள் எளிதாகக் கிடைக்கும்.

இந்த முறையில், பயிர்களுக்கு வேண்டிய உரத்தையும் நீரையும் துல்லியமாகக் கணக்கிட்டுத் தர முடியும். எல்லாச் செடிகளுக்கான உரம், நீருடன் சீராகச் சென்றடைவதால், மகசூல் 25-30 சதம் கூடும்.

உரப்பயன்படு திறன் 80-90 சதம் இருப்பதால், இட வேண்டிய உரத்தில் 25 சதத்தைச் சேமிக்கலாம். சொட்டுநீர் உரப் பாசனம் மூலம் தான், நுண் சத்துகளைத் திறம்பட அளிக்க முடியும். நீர்ச் சேமிப்புடன், நேரம், வேலையாள் மற்றும் கூலி, மின்சக்தி ஆகியன கணிசமாகக் குறையும்.

உரப்பாசனக் கருவிகள்: வெஞ்சுரி கருவி, உரத்தொட்டி, உரச்செலுத்தி ஆகிய மூன்று முக்கிய கருவிகள், சொட்டுநீர்ப் பாசனம் முறையில் உரத்தைத் தருவதற்குப் பயன்படும்.

வெஞ்சுரி கருவி: இதை, முதன்மைக் குழாய்க்கு இணையாக அமைக்க வேண்டும். பயன்படுத்த எளிதாக இருக்கும் இக்கருவியின் செயல் திறன் அதிகம். விலையும் குறைவு. சிறியளவு நிலத்துக்கு மிகவும் ஏற்றது. இது, நீரின் வேறுபட்ட அழுத்தத்தால் இயங்குகிறது.

இதன் மூலம் உரத்தைப் பயிர்களுக்கு அளித்த பிறகு, 10-15 நிமிடம் நல்ல நீரை விட வேண்டும். இதனால், வெஞ்சுரியில் அடைப்புகள் இருந்தால் அகலும். இந்தக் கருவியால் மொத்த நீரோட்ட அழுத்த விரயம் அதிகமாகும். இதை அமைக்கச் சுமார் 2,000 ரூபாய் செலவாகும்.

உரத்தொட்டி: இதை, முக்கியக் குழாயில், வடிகட்டிகளுக்கு முன் இணைக்க வேண்டும். இந்தத் தொட்டியில் இடப்படும் உரமானது, முதன்மைக் குழாய் வழியாகச் செல்லும் நீரில் கலந்து பயிர்களுக்குச் செல்லும். இந்த உரத் தொட்டியில், திட உரங்களையும் பயன்படுத்தலாம்.

இந்தத் தொட்டியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மொத்த நீரழுத்த விரயம், வெஞ்சுரி கருவியை விடக் குறைவாகும். இந்த உரத் தொட்டியின் வாயை, மூடி வைத்துப் பயன்படுத்த வேண்டும். இதன் விலை 3,000- 4,000 ரூபாயாகும்.

உரச்செலுத்தி: இது, குழாயில் போகும் பாசனநீரின் அழுத்தத்தைக் கொண்டு இயங்கும். குழாயில் போகும் நீரோட்டத்துக்கு ஏற்ப, உரக்கரைசலை எடுத்துச் செல்லும் அளவு அமையும். இதனால், நீர் மற்றும் உரத்தின் விகிதம் எப்போதும் ஒரே நிலையில் இருக்கும்.

எனவே, ஒவ்வொரு செடிக்கும் வேண்டிய உரத்தின் அளவைத் துல்லியமாகத் தர முடியும். இந்த உரச் செலுத்தியில், நீரில் முற்றிலும் கரையும் உரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்தக் கருவியை இணைப்பதால், பாசனக் குழாயில் செல்லும் நீரோட்ட அழுத்த இழப்பு மிகவும் குறைவு. நீரோட்ட அளவை, பிஸ்டனில் ஏற்படும் கிளிக் எண்ணிக்கை மூலம் கணக்கிடலாம். அதிகப் பரப்பில் பாசனம் செய்ய இக்கருவி மிகவும் ஏற்றது. இதன் விலை 12,000- 15,000 ரூபாயாகும்.

வடிகட்டி: பாசனநீரில் மிக நுண்ணிய மண், களிமண், நெகிழித் துகள்கள் கலந்திருந்தால், வலை வடிகட்டி, திரை வடிகட்டியைப் பயன்படுத்தலாம். இந்த வடிகட்டிகள், நெகிழி, இரும்பு, முலாம் பூசப்பட்ட இரும்பு மூலம் தயாரிக்கப் படுகின்றன.

ஆற்றுநீர், அணைநீர் மற்றும் சுத்தம் செய்த கழிவுநீரைப் பாசனத்தில் பயன்படுத்தும் போது, மணல் வடிகட்டி, வலை வடிகட்டி ஆகிய இரண்டையும் சொட்டுநீர்ப் பாசன அமைப்பில், வரிசையாகப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, பக்கவழி அமைப்பும், உரப்பாசன அலகும், வடிகட்டிகளுக்கு முன் பொருத்தப்பட வேண்டும்.

மணலைப் பிரிக்கும் கருவி: வடிகட்டிகளில் இருந்து வெளிவரும் நீர், முதன்மைக் குழாய் வழியாகத் துணைக் குழாய்களுக்குச் செல்கிறது. 40 முதல் 110 மி.மீ. வரை வெளி விட்டம், 4 கி.கி., செ.மீ. 2 முதல் 6 கி.கி., செ.மீ. 2 வரை அழுத்தம் தாங்கும் குழாய்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பக்கக் குழாய்கள், லேட்டரல் ஆகியன, துணைக் குழாய்களில் இருந்து வரும் நீரை, சொட்டுவான்களுக்கு அளிக்கின்றன. இதற்கு, 12 முதல் 16 மி.மீ. வரையுள்ள குழாய்கள் பயன்படுகின்றன.

சொட்டுவான்கள்: இவை, பக்கக் குழாய்கள் மூலம் வரும் நீரை, பயிர்களின் வேர்ப் பகுதியில் சொட்டுச் சொட்டாகச் சொட்டும். இவை, மணிக்கு 2, 4, 8, 10 லிட்டர் நீரை வெளியேற்றும் அளவுகளில் கிடைக்கின்றன.

மேலும், இவற்றை 0.5 கி.கி., செ.மீ. 2 முதல் 4 கி.கி., செ.மீ. 2 வரையான இயக்க அழுத்த அளவுகளில் பொருத்தலாம். சொட்டுவான்களைப் பொருத்தும் இடத்தைப் பொறுத்து, இவற்றை, குழாய் உள் சொட்டுவான்கள், குழாய் வெளிச் சொட்டுவான்கள் எனப் பிரிக்கலாம்.

முக்கியத் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, தினமும் ஒரு செடிக்கு எத்தனை லிட்டர் நீர் தேவை என்பதைப் பார்க்கலாம்.

திராட்சை: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 25-45 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 90-100 லிட்டர்.

மாமரம்: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 30-50 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 90-100 லிட்டர்.

கொய்யா: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 22-30 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 70-100 லிட்டர்.

சப்போட்டா: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 20-35 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 70-100 லிட்டர்.

மாதுளை: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 20-25 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 60-130 லிட்டர்.

தென்னை: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 60-90 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 250-350 லிட்டர்.

வாழை: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 8-15 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 30-40 லிட்டர்.

எலுமிச்சை: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 10-15 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 25-45 லிட்டர்.

பப்பாளி: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 5-8 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 18-26 லிட்டர்.

கத்தரி: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 1-2 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 4-8 லிட்டர்.

வெண்டை: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 1-2 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 4-8 லிட்டர்.

தக்காளி: சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 1-2 லிட்டர், வாய்க்கால் பாசனம் மூலம் 4-8 லிட்டர்.

மேலும் விவரங்களுக்கு, துல்லிய வேளாண்மை மேம்பாட்டு மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர். தொலைபேசி: 0422- 6611258.


முதன்மை ஆராய்ச்சியாளர், துல்லிய வேளாண்மை மேம்பாட்டு மையம், வேளாண் பொறியியல் கல்லூரி,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading