ஆடு, மாடுகளுக்கு இப்படித் தீவனம் கொடுத்துப் பாருங்க!

Cow fooder

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020

விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்வாதாரங்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படும் போதெல்லாம், கால்நடை வளர்ப்பே மக்களின் ஊன்றுகோலாக உள்ளது.

நம் நாட்டில் மேய்ச்சல் நிலங்கள், விளைநிலங்கள் குறைந்து வருவது, தீவன இடுபொருள் செலவானது உற்பத்திச் செலவில் 70-75% இருப்பது போன்ற காரணங்களால், கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை பெரியதொரு சவாலாகவே இருக்கிறது. ஆடு, மாடு போன்ற அசையூண் வயிற்றை உடைய கால்நடைகளின் சத்துகளை நிறைவு செய்வதில் பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனம் ஆகிய மூன்று தீவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எனவே பண்ணையாளர்கள், கிராமங்களில் கிடைக்கும் மரபுசார் தீவனங்கள் மற்றும் மதிப்பூட்டிய தீவனப் பொருள்களின் பயன்பாடு மற்றும் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தீவனப் பங்கீடு

ஒரு கால்நடையின் அன்றாடத் தீவனப் பங்கீடு என்பது, அதன் எடை மற்றும் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப இருக்க வேண்டும். கால்நடைகளின் சரிவிகித உணவு என்பது, பசுந்தீவனம், அடர்தீவனம், உலர்தீவனம் ஆகிய மூன்றையும் கிடைக்கச் செய்வதே ஆகும்.

பசுந்தீவனம்

கால்நடைகளின் உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தித் திறனுக்குப் பசுந்தீவனம் மிகவும் முக்கியம். தமிழ்நாட்டில் பசுந்தீவனப் பற்றாக்குறை 60-65% உள்ளது. சுவைமிகு பசுந்தீவனம் சத்துகள் நிறைந்ததாகவும் கால்நடைகளுக்குக் குளிர்ச்சியை அளிப்பதாகவும் உள்ளது. இதிலுள்ள நுண் சத்துகள், கால்நடைகளில் சினை முட்டை உருவாதல் மற்றும் சினைப் பிடிப்பு எளிதாகவும், இயல்பாகவும் நடைபெற உதவுகின்றன. இதில், செரிக்கக்கூடிய நார் மற்றும் மாவுச்சத்துள்ள தானியம் மற்றும் புல்வகைத் தீவனங்கள், புரதச்சத்து நிறைந்த பயறுவகைத் தீவனங்கள் என இரு வகைகள் உள்ளன.

தானியவகைத் தீவனங்கள்

இவ்வகைத் தீவனப் பயிர்களைப் பூக்கும் போது, அதாவது, 45-55 நாட்களில் அறுவடை செய்து கால்நடைளுக்கு அளித்தல் பயனளிக்கும். கோ-29, கோ-31 ஆகிய மறுதாம்புத் தீவனச்சோளம், ஆப்பிரிக்க நெட்டைத் தீவன மக்காச்சோளம், கோ.8 என்னும் தீவனக்கம்பு போன்றவை தானியவகைத் தீவனங்கள் ஆகும். இவற்றுள், மறுதாம்புத் தீவனச்சோளம் வேகமான வளர்ச்சி, அதிக விளைச்சல், உலர் எடை, ருசி போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதை ஆண்டுக்கு 6-7 முறை அறுவடை செய்யலாம்.

முதல் அறுவடையை 65-70 நாட்களிலும், அடுத்தடுத்து 45-50 நாட்கள் இடைவெளியிலும் அறுவடை செய்யலாம். இவ்வகையில் ஆண்டுக்கு ஒரு எக்டரில் இருந்து 170-190 டன் தீவனம் கிடைக்கும். இது, புரதச்சத்து 8.41%, தூர்களின் எண்ணிக்கை 15-20, செரிக்கும் திறன் 88.4% கொண்டது.

புல்வகைத் தீவனங்கள்

இவ்வகைப் பசும்புற்களில் நார்ச்சத்தும், 8-12% புரதச்சத்தும் இருக்கும். நார்ச்சத்துச் செரித்து எரிசக்தியைத் தருவதுடன், பாலில் கொழுப்பின் அளவையும் கூட்டும். கோ.4, கோ.5 கம்பு நேப்பியர் ஒட்டுப்புற்கள், சூப்பர் நேப்பியர் ஒட்டுப்புல், ஆஸ்திரேலியன் சிவப்பு நேப்பியர் ஒட்டுப்புல், கொழுக்கட்டை மற்றும் கோ.3 கினியாப்புல் இவ்வகையில் அடங்கும். இவற்றுள் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் மற்றும் சூப்பர் நேப்பியர் ஒட்டுப்புல் ஆகியவை எக்டருக்கு 375-400 டன் என, புல் வகைகளில் அதிக கசூலைத் தரவல்லவை.

அதிகச் சுவையுள்ள இப்புற்களைக் கழிக்காமல் ஆடு மாடுகள் விரும்பி உண்ணும். ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையை 75-80 நாட்களிலும், அடுத்தடுத்து 45 நாட்கள் இடைவெளியிலும் அறுவடை செய்யலாம். கினியாப்புல்லும் அதிக மகசூலைத் தரும். நிழலில் நன்கு வளர்வதால் தென்னந்தோப்பில் ஊடுபயிராக இடலாம்.

பயறுவகைத் தீவனங்கள்

இவற்றில் புரதம் மிகுந்திருக்கும். இப்புரதத்தில் தேவையான அளவில் குறிப்பிட்ட வரிசையில் இருக்கும் அமினோ அமிலங்கள் எளிதில் செரிப்பதால், பயறுவகைத் தீவனங்கள் கால்நடைகளுக்கு மிகவும் அவசியமாகும். இவற்றைப் பசும்புல்லுடன் 30:70 என்னுமளவில் கலந்து கொடுக்க வேண்டும். இவை பால் மற்றும் மாமிச உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன. மேலும், புரதமும் நிறைந்திருப்பதால் இத்தீவனங்கள், அடர் தீவனத்துக்கு ஒப்பாகக் கருதப்படுகின்றன. வேலிமசால், முயல்மசால், தீவனத் தட்டைப்பயறு, நரிப்பயறு ஆகியனவும் பயறுவகைத் தீவனங்களாகும். இவற்றுள் வேலிமசால் வறட்சியைத் தாங்கி வளரும்; கூடுதல் மகசூலைத் தரும். இதில் 20-22% புரதம் உள்ளது. இது ஆடுகளுக்கு மிகவும் ஏற்றது.

மரவகைத் தீவனங்கள்

மரவகைத் தீவனங்கள் சமச்சீர் தீவனத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பண்ணைக்கு ஏற்ற குளிர்ச்சியைத் தரும் மரங்கள், புரதம் மிகுந்த தீவனத்தையும் தருகின்றன. சவுண்டல், அகத்தி, சித்தகத்தி, கிளைரிசிடியா ஆகியன இவ்வகையில் அடங்கும். ஒரு ஏக்கரில் வளர்க்கப்படும் தீவன மரங்களைக் கொண்டு 40 ஆடுகள் அல்லது 5 மாடுகளை வளர்க்கலாம்.

ஒரு ஏக்கரில் 40% புல்வகை, 30% பயறுவகை, 20% தானியவகை, 10% மரவகை என, தீவனப்பயிர்களைப் பயிரிட வேண்டும். கால்நடைகளுக்கு 75% புல் மற்றும் தானியத் தீவனங்களையும், 25% மரவகைத் தீவனங்களையும் கலந்து கொடுக்க வேண்டும்.

உலர் தீவனம்

பசுந்தீவனங்களை அறுவடை செய்யும்போது, போதிய வெய்யில் இருப்பின், உலர வைத்துச் சேமிக்கலாம். உலர்தீவனம், மண் மற்றும் களைகள் இல்லாமல் வெளிரிய பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். 15%க்குக் குறைவாக ஈரப்பதம் இருத்தல் வேண்டும். எனவே, வெய்யிலில்  நன்கு காய வைத்துக் குவியலாக அல்லது படப்பாகச் சேமித்து வைக்கலாம்.

உலர் தீவனத்தைச் சினை மாடுகளுக்குக் கொடுத்தால், கொழுப்புச் சார்ந்த நோய், மாவுச்சத்துக் குறையால் ஏற்படும் நோய், கருப்பைத் தள்ளுதல், நஞ்சுக்கொடி தங்குதல் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். வைக்கோல், சோளத்தட்டை, கம்புத்தடை, மக்காச்சோளம், உளுந்துச்செடி, கடலைக்கொடி போன்றவை இவற்றில் அடங்கும்.

அடர் தீவனம்

கால்நடைகளின் உற்பத்தியை மேம்படுத்த, பசும்தீவனம் மற்றும் உலர் தீவனத்துடன் அடர் தீவனத்தையும் போதியளவில் கொடுக்க வேண்டும். இதில் எரிசக்தி மிக்க தானியங்கள், தானியத் துணைப் பொருள்கள், புரதமுள்ள புண்ணாக்குகள், விலங்கினப் புரதப் பொருள்கள், நுண்சத்துகள் ஆகியன போதியளவில் இருக்கும். மேலும் 10%க்குக் குறைவான ஈரப்பதமும், நார்ச்சத்தும் இருக்கும். கறவை மாடுகளுக்கான அடர்தீவனம், 15% புரதத்தையும், 60-70% செரிமானச் சத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு லிட்டர் பாலுக்கு 400 கிராம் வீதம் அடர் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு 10 லிட்டர் பாலைத் தரும் மாட்டுக்கு 4 கிலோ கிராம் அடர்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். 1-2 மாதக் கன்றுக்கு 125 கிராம், 2-3 மாதக் கன்றுக்கு  625 கிராம், 4-12 மாதக் கன்றுக்கு  1 கிலோ வீதம் அடர் தீவனத்தைத் தர வேண்டும்.

கால்நடைத் தீவனத்தில் அசோலா பங்கு

கால்நடைகளுக்குப் பசுந்தீவனம், உலர் மற்றும் அடர் தீவனத்துடன் புரதம் மிகுந்த அசோலாவையும் கலந்து கொடுத்தால், தீவனச் செலவில் நான்கில் ஒரு பங்கு குறையும். மேலும், அசோலாவில் உள்ள புரதம், உடல் வளர்ச்சிக்கான ஏ,பி12 வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், பீட்டா கரோட்டீன்கள், தாதுப்புகள், உணவை எளிதாகச் செரிக்கச் செய்வதால், இந்த அசோலா கால்நடைகளின் உடல் எடையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் கால்நடைத் தீவனத்தில் சிறந்த மாற்றுணவாக அசோலா விளங்குகிறது. ஆடுகள், கறவை மாடுகள், பன்றிகள், வாத்துகள், கோழிகள், முயல்கள் மற்றும் மீன்களுக்குச் சிறந்த தீவனமாக அசோலா பயன்பட்டு வருகிறது.

அசோலாவைக் கறவை மாட்டுக்குத் தினமும் 1-1.5 கி.கி., உழவு மாட்டுக்கு 1 கி.கி., முட்டை, இறைச்சி கோழி மற்றும் வான்கோழிக்கு 20-30 கிராம், ஆட்டுக்கு 300-500 கிராம், வெண்பன்றிக்கு 1.5-2 கி.கி., முயலுக்கு 100 கிராம் வீதம் கொடுக்கலாம்.

ஊறுகாய்ப்புல்

இது, பசுந்தீவனங்களை அவற்றின் பசுமை மாறாமல் மிகவும் குறைந்த சத்து இழப்புடன் பதப்படுத்திச் சேமிக்கும் முறையாகும். கோ.4, கோ.5. தீவனப் புற்கள், சூப்பர் நேப்பியர் புல், கினியாப்புல், சோளம், மக்காச்சோளம், கம்பு, காராமணி, குதிரைமசால், வேலிமசால் ஆகியவற்றைப் பதப்படுத்தி ஊறுகாய்ப் புல்லாகத் தயாரிக்கலாம்.

பயறுவகைத் தீவனங்களை மட்டுமே வைத்து ஊறுகாய்ப்புல்லைத் தயாரிக்கக் கூடாது. ஏனெனில் அவற்றிலுள்ள புரதச்சத்து சிதைந்து விடக்கூடும். சோளம், மக்காச்சோளம் வீரிய ரக புல் வகைகளுடன் பயறுவகைத் தீவனங்களை 3:1 அல்லது 4:1 என்னுமளவில் கலந்து பதனப் பசுந்தீவனத்தைத் தயாரிக்கலாம். பொதுவாகத் தடித்த தண்டுள்ள பசுந்தீவனங்களை ஊறுகாய்ப் புல்லாக மாற்றலாம்.

பூஞ்சையால் பாதிக்கப்பட்ட ஊறுகாய்ப் புல்லைக் கால்நடைகளுக்கு அளிக்கக் கூடாது. அதிகப் புளிப்புச் சுவையுடன் உள்ள புல்லை ஆடுகளுக்குக் கொடுக்கக் கூடாது. கறவை மாட்டுக்குத் தினமும் 15-20 கிலோ, கிடேரிக்கு 5-8 கிலோ, வளர்ந்த கன்றுக்கு 4-5 கிலோ, வளர்ந்த ஆட்டுக்கு 200-300 கிராம் கொடுக்கலாம்.

தமிழ்நாட்டில் பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பசுந்தீவனம் கிடைப்பது அரிதாக உள்ளது. இக்காலத்தில் பயன்படும் வகையில் ஊறுகாய்ப் புல்லைத் தயாரித்துப் பசுந்தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்.

ஹைட்ரோபோனிக்ஸ் பசுந்தீவனம்

கோடையில் ஏற்படும் வறட்சியால் பசுந்தீவனத் தட்டுப்பாடு ஏற்படும். இதைச் சமாளிக்க, ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் மண்ணில்லாப் பசுந்தீவனம் வளர்ப்பு முறையில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். மூன்றடி அகலம் ஆறடி உயரம் கொண்ட சிறிய அறையில் பசுந்தீவன விதைகளை இட்டு, ஏழு நாட்களில் எட்டு கிலோ பசுந்தீவனத்தை அறுவடை செய்யலாம். மக்காச்சோளம், சோளம். கொள்ளு, சணப்பை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, தட்டைப்பயறு ஆகியவற்றை வளர்த்துக் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.


தீவனம் THIRUMALAIVASAN

மு.திருமலைவாசன்,

முனைவர் கோ.அழகுக்கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம்,

சோழமாதேவி, அரியலூர்-612902.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!