பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

விவசாயக் கண்காட்சி

ச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், 2024 ஜூன் 1, 2, 3, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில், பொள்ளாச்சியில், கோவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த மஹாலில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது. இது, பச்சை பூமி நடத்திய 13 ஆம் கண்காட்சி ஆகும்.

மண்ணும் மன்னுயிரும் வாழும் வகை செய்வோம் என்னும் நோக்கில், விவசாயம் மற்றும் விவசாயப் பெருமக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, கடந்த 2011 ஆம் ஆண்டு பச்சை பூமி மாத இதழ் தொடங்கப்பட்டது. அன்று முதல் தனது வேளாண் வளர்ச்சிப் பணியைச் செவ்வனே செய்து வருகிறது பச்சை பூமி.

இந்த விவசாய வளர்ச்சிப் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், விவசாயம், விவசாயிகள் மற்றும் வேளாண் வணிக நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், 2021 அக்டோபர் முதல், தமிழகம் முழுவதும் பரவலாக, விவசாயக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

ஒட்டன்சத்திரத்தில் இரண்டு முறை, இராஜபாளையத்தில் ஒருமுறை, நாமக்கல்லில் இரண்டு முறை, தேனியில் ஒருமுறை, திருநெல்வேலியில் இரண்டு முறை, கோபிச்செட்டிப் பாளையத்தில் ஒருமுறை, பொள்ளாச்சியில் இரண்டு முறை, தஞ்சையில் ஒருமுறை என, 12 விவசாயக் கண்காட்சிகளைச் சிறப்பாக நடத்திய பச்சை பூமி, தனது 13 ஆம் விவசாயக் கண்காட்சியை, பொள்ளாச்சியில் மூன்றாம் முறையாக, 2024 ஜூன் 1, 2, 3, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் நடத்தியது.

இந்தக் கண்காட்சியில், விவசாயம் செய்யத் தேவையான விதைகள், பழமரக் கன்றுகள், தென்னங் கன்றுகள், உரங்கள், டிராக்டர்கள், ரொட்டோவேட்டர்கள், தெளிப்பான்கள், சிக்கனப் பாசனக் கருவிகள், அரிவாள்கள், கொத்துகள், மண்வெட்டிகள் போன்ற விவசாயக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் நிறைந்த ஸ்டால்கள் இடம்பெற்று இருந்தன.

மேலும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பால்வளத்துறை போன்ற அரசுத் துறைகளின் ஸ்டால்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் வளர்ப்புக்குத் தேவையான தீவனம் மற்றும் பொருள்கள் அடங்கிய ஸ்டால்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஸ்டால்கள், விவசாயக் கடன் வசதியை அறியும் வகையில் வங்கிகளின் ஸ்டால்கள், மதிப்புக்கூட்டுப் பொருள்கள் அடங்கிய ஸ்டால்கள் என, நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்தக் கண்காட்சியில், விவசாயப் பெருங்குடி மக்கள், கால்நடைப் பண்ணையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் திரளாகப் பங்கேற்றுப் பயனடைந்தனர்.


பச்சை பூமி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!