குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

குறுவை DSCN1653 scaled

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 

ந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் நெல் 42 சதமாக உள்ளது. கூடி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நெல்லின் தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. எனவே, நெல் சாகுபடியில் கூடுதல் விளைச்சலை எடுக்க வேண்டியிருக்கிறது.

குறுவைப் பருவ நெல் இரகங்கள்

இந்தப் பருவம் 95-115 நாட்களைக் கொண்டது. ஜூன் ஜூலையில் விதைப்புத் தொடங்கி ஆகஸ்ட் செப்டம்பரில் அறுவடை முடிந்து விடும். இந்தப் பருவத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 4 இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது.

ஆடுதுறை 36

இதன் வயது 110 நாட்கள். குட்டையாக இருக்கும் இது சாயாது. எக்டருக்கு 6 டன் விளைச்சலைத் தரும். அரிசி, நடுத்தரமாக வெள்ளையாக இருக்கும். குருத்துப்பூச்சி, குலை நோயை ஓரளவு தாங்கி வளரும். தமிழகம் முழுதும் சாகுபடி செய்யலாம்.

ஆடுதுறை 37

இதன் வயது 105 நாட்கள். எக்டருக்கு 5.5-6 டன் விளைச்சலைத் தரும். அரிசி குட்டையாக, பருமனாக, வெள்ளையாக இருக்கும். குலைநோய், பழுப்புப்புள்ளி நோய், புகையான், பச்சைத் தத்துப் பூச்சிகளை நன்கு எதிர்த்து வளரும். இலைக்கருகல் நோய், மஞ்சள் குட்டை நோய், ஆனைக்கொம்பன், இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதலை ஓரளவுக்குச் சமாளிக்கும்.

ஆடுதுறை 42

இதன் வயது 115 நாட்கள். எக்டரில் 6-6.5 டன் விளைச்சல் கிடைக்கும். அரிசி, நீளமாக, சன்னமாக, வெள்ளையாக இருக்கும். குலைநோய், புகையான் தாக்குதலைப் பாதிக்குப் பாதி தாங்கி வளரும். சொர்ணவாரி, கார், குறுவையில்  தமிழகமெங்கும் பயிரிடலாம்.

ஆடுதுறை 43

இதன் வயது 105-110 நாட்கள். எக்டருக்கு 6,000 கிலோ விளைச்சலைத் தரும். அரிசி, மத்திமமாக, வெள்ளையாக இருக்கும். சொர்ணவாரி, கார், குறுவைக்கு ஏற்றது.

ஆடுதுறை 45

இதன் வயது 105-115 நாட்கள். எக்டருக்கு 6,000 கிலோ விளைச்சலைத் தரும். அரிசி, மத்திமமாக இருக்கும். கார், குறுவை, சொர்ணவாரிக்கு ஏற்றது. 65% முழு அரிசி கிடைக்கும். ஆனைக்கொம்பனை எதிர்த்து வளரும். புகையான், குருத்துப்பூச்சித் தாக்குதலை மிதமாக எதிர்க்கும்.

ஆடுதுறை 47

இதன் வயது 115-118 நாட்கள். எக்டருக்கு 7 டன் வரை விளைச்சல் கிடைக்கும். அரிசி, மத்திமமாக, வெள்ளையாக இருக்கும். சொர்ணவாரி, கார், குறுவை, நவரைக்கு ஏற்றது. இலைக்கருகல், துங்ரோ நோயை எதிர்த்து வளரும்.

ஆடுதுறை 48

இதன் வயது 95 நாட்கள். எக்டருக்கு 4.8 டன் விளைச்சல் கிடைக்கும். அரிசி, நீளமாக, சன்னமாக, வெள்ளையாக இருக்கும். நீர்ப் பற்றாக்குறையாக இருந்தால் நேரடியாக விதைக்கலாம். பாசனநீர் வருவது தாமதமாகும் காலங்களில், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பின் குறுவைக்கு ஏற்றது. இது, குருத்துப்பூச்சி, இலைமடக்குப் புழுத் தாக்குதலை எதிர்த்து வளரும்.

திரூர்க்குப்பம் 9

இதன் வயது 105-110 நாட்கள். குட்டையாக இருக்கும்; சாயாது. எக்டருக்கு 6.5 டன் விளைச்சலைத் தரும். அரிசி, குட்டையாக, பருமனாக, சிவப்பாக இருக்கும்.

அம்பை 16

இதன் வயது 115 நாட்கள். 90-95 செ.மீ. வரை வளரும்; சாயாது. எக்டருக்கு 5.5 டன் விளைச்சல் கிடைக்கும். வைக்கோலும் நிறையக் கிடைக்கும். அரிசி, குட்டையாக, குட்டை பருமனாக இருக்கும். குலைநோய், புகையான் தாக்குதலை எதிர்த்து வளரும்.

திருச்சி 2

இதன் வயது 115-120 நாட்கள். குட்டையாக இருக்கும்; சாயாது. எக்டருக்கு 5.4 டன் விளைச்சல் கிடைக்கும். அரிசி, நீளமாக, சன்னமாக, வெள்ளையாக இருக்கும். களர் உவர் நிலங்களுக்கு ஏற்றது. குலைநோயைத் தாங்கி வளரும்.

கோயம்புத்தூர் 51

இதன் வயது 105-110 நாட்கள். நன்கு தூர்ப் பிடித்து வளரும்; சாயாது. எக்டருக்கு 6.6 டன் விளைச்சல் கிடைக்கும். அரிசி, சன்னமாக, வெள்ளையாக இருக்கும். புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, குலைநோய்த் தாக்குதலை மிதமாகச் சமாளிக்கும்.

மதுரை 5

இதன் வயது 95-100 நாட்கள். எக்டருக்கு 5 டன் விளைச்சல் கிடைக்கும். அரிசி, மத்திமமாக, வெள்ளையாக இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும்.

மதுரை 6

இதன் வயது 110-115 நாட்கள். எக்டருக்கு 6.2 டன் விளைச்சல் கிடைக்கும். அரிசி, நீளமாக, சன்னமாக, வெள்ளையாக இருக்கும். அவல் செய்வதற்கு மிகவும் ஏற்றது. 

விதைத் தேர்வு

விதைகளின் முளைப்புத்திறன் 80%க்கு மேல் இருக்க வேண்டும். அதற்குச் சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும். தங்களின் சொந்த நெல்லையே விதையாகப் பயன்படுத்தும் விவசாயிகள், விதைகளை 1.2% உப்பு நீரில், அதாவது, 3 கிலோ கல் உப்பை 18 லிட்டர் நீரில் கலந்த கலவையில் இட்டு, கரைசலில் மிதக்கும் விதைகளை நீக்கி விட்டு, மூழ்கிய விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்குப் பத்து கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம் கலந்த நீரில் விதைகளை 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதை வடிகட்டி, இருட்டு அறையில் 24 மணி நேரம் வைத்திருந்து முளை கட்ட வேண்டும். விதைப்பதற்கு முன்பு இந்த விதைகளை, ஒரு பொட்டலம் (200 கிராம்) அசோஸ்பயிரில்லம், ஒரு பொட்டலம் (200 கிராம்) பாஸ்போ பாக்டீரியம் ஆகியவற்றுடன் நன்கு கலக்க வேண்டும்.

நாற்றங்கால் தயாரிப்பு

ஒரு ஏக்கர் நடவுக்கு 8 சென்ட் நாற்றங்கால் தேவைப்படும். வடிகால் வசதியுள்ள நிலமாகவும், நிழல் மற்றும் மின்கம்பம் அருகில் இல்லாத நிலமாகவும் நாற்றங்கால் இருக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன் 400 கிலோ தொழுவுரத்தை அடியுரமாக வேண்டும். மேலும், 16 கிலோ டிஏபி அல்லது 6.4 கிலோ யூரியா மற்றும் 48 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும். பின்பு, 20க்கு 2மீ., அதாவது, ஒரு சென்ட் மேட்டுப் பாத்திகளை அமைத்து, அவற்றுக்கு இடையில் சிறு கால்வாய்களை அமைக்க வேண்டும். பிறகு அந்தப் பாத்திகளில் முளை கட்டிய விதைகளை ஒரு சென்ட்டுக்கு 3 கிலோ வீதம் சீராகத் தூவ வேண்டும். செம்மை நெல் சாகுபடிக்கு 2-5 கிலோ விதைகள் போதும்.

நீர் நிர்வாகம்

விதைத்த 18-24 மணி நேரத்தில் நாற்றங்காலில் நீரே இல்லாமல் வடித்துவிட வேண்டும். இல்லையெனில் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். ஆனால், நாற்றங்காலில் ஈரம் காயாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

களை நிர்வாகம்

விதைத்த எட்டாம் நாள் 80 மில்லி பூட்டாகுளோர் அல்லது தயோபேன்கார்ப் களைக் கொல்லியை மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும். அப்போது, நாற்றங்காலில் சிலிர்ப்பு நீர் இருக்க வேண்டும். பின்பு 2-3 நாட்களுக்கு நீரை வடிக்கக் கூடாது.

மேலுரம்

நாற்றுகள் நன்றாகச் செழித்து வளரவில்லை யெனில், 4 கிலோ யூரியா அல்லது 8 கிலோ அம்மோனியம் சல்பேட்டை இடலாம். களிமண் நிலமாக இருந்தால் நாற்றுகளின் வேர்கள் அறுபடுவதைத் தவிர்க்க, 2 கிலோ ஜிப்சத்தை, நாற்றுகளைப் பறிப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன் இட வேண்டும். 3-5 இலைகளையுடைய 25 வயது நாற்றுகளைப் பறித்து நட வேண்டும். செம்மை நெல் சாகுபடிக்கு, 14 நாள் நாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். வேர்களில் அதிகமாக மண் ஒட்டியிருந்தால் அதை அகற்ற, நாற்றுகளைக் கடினமான தரையில் அடிக்காமல், நீரில் மட்டுமே அலசிச் சுத்தம் செய்ய வேண்டும். பின்பு, நடும் வரையில் வேர்கள் நீருக்குள் இருக்க வேண்டும்.

நடவு வயல் தயாரிப்பு

கோடையில் 2-3 தடவை உழுது, நிலத்தின் நீர்பிடிப்புத் தன்மையைக் கூட்டலாம். இதன் மூலம், பயிருக்குத் தேவைப்படும் நீரின் தேவையைக் குறைக்கலாம். மேலும், கோடையுழவால் களைகள் கட்டுப்படும். மண்ணிலுள்ள பூச்சிகளின் கூட்டுப் புழுக்களும், நோய்க் கிருமிகளும் அழிக்கப்படும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழுவுரம் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை இட வேண்டும். 200 கிலோ ஜிப்சத்தையும் இடவேண்டும். பிறகு 10 கிலோ துத்தநாக சல்பேட் அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நெல் நுண்ணூட்டக் கலவை 5 கிலோவை, இருபது கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும். மேலும், தலா 4 பொட்டலம் அசோஸ்பயிரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை, 10 கிலோ தொழுவுரத்தில் கலந்து தூவ வேண்டும்.

உரமிடுதல்

மண்ணாய்வின்படி உரமிட வேண்டும். அல்லது பொதுப் பரிந்துரைப்படி  ஏக்கருக்கு 50:20:20 வீதம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். அதாவது, 109, 125, 34 கிலோ யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷை இட வேண்டும்.

தழைச்சத்து

மேலுரமாக, தலா 27 கிலோ யூரியாவை நட்ட 15, 30, 45 ஆம் நாளில் இட வேண்டும். யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கை 5:4:1 என்னும் விகிதத்தில் கலந்து இட வேண்டும். இப்படிச் செய்வது, யூரியாவிலுள்ள தழைச்சத்து உடனடியாகப் பயிருக்குக் கிடைத்து, பூக்கள் மலர்ந்து கருவுற்று அதிக எடையுள்ள நெல் மணிகள் உருவாக வழிவகுக்கும். கடைசித் தடவையில் யூரியாவை மட்டுமே இட வேண்டும்.

மணி மற்றும் சாம்பல் சத்து

125 கிலோ சூப்பர் பாஸ்பேட் முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். 17 கிலோ பொட்டாஷை அடியுரமாகவும், மீதமுள்ள 17 கிலோ பொட்டாஷை நட்ட 30 ஆம் நாளிலும் இட வேண்டும்.

களை நிர்வாகம்

நட்ட மூன்றாம் நாள் ஏக்கருக்கு 1 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது பிரிட்டிலாகுளோர் அல்லது 4 கிலோ பென்சல்ப்யூரான் மீதைல் + பிரிட்டிலாகுளோர் மருந்துகளில் ஏதாவது ஒன்றை 10 கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும். நட்ட 15-20 நாட்களுக்குள் 100 மில்லி பிஸ்பைரிபேக் சோடியம் அல்லது 30 கிராம் அசிம்சல்ப்யூரான் அல்லது 600 கிராம் 2, 4 டி சோடியம் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். களைக்கொல்லியை இடும்போது வயலில் சிலிர்ப்பு நீர் இருக்க வேண்டும். பின்பு 2-3 நாட்களுக்கு நீரை வடிக்கக் கூடாது.

நீர் நிர்வாகம்

வயலில் தொடர்ந்து நீர் தேங்குவதைத் தவிர்த்து, காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீரைப் பாய்ச்சினால் 30-40% நீரைச் சேமிக்கலாம். தூர்ப் பிடிக்கும் போது, பூக்கும்போது, கதிர் உருவாகும் போது மற்றும் பால் பிடிக்கும் போது போதுமான நீரைப் பாய்ச்ச வேண்டும். அறுவடைக்குப் பத்து நாட்களுக்கு முன் பாசனத்தை நிறுத்திவிட வேண்டும்.

இலைவழி ஊட்டம்

ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 4 கிலோ டிஏபி, 2 கிலோ பொட்டாஷை, 200 லிட்டர் நீரில் கலந்து, கதிர் உருவாகும் போதும், பின்பு 10 நாட்கள் கழித்தும் தெளித்தால் நெல் மகசூல் கூடும்.

ஒருங்கிணைந்த பூச்சி, நோய்ப் பாதுகாப்பு

பூச்சி மற்றும் நோய்களால் 30% வரை விளைச்சல் பாதிக்கப்படும். எனவே, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முகைளைக் கடைப்பிடிக்க வேண்டும். பூச்சி, நோய் எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல். கோடையுழவு செய்தல். அடியுராக வேப்பம் புண்ணாக்கை இடுதல். வயலில் நீர் தேங்காமல் இருத்தல். வயல் வரப்புகளைக் களையில்லாமல் சுத்தமாக வைத்திருத்தல். தழைச்சத்தைப் பிரித்து இடுதல் அல்லது இலைவண்ண அட்டையைப் பயன்படுத்தி, தழைச்சத்தை இடுதல்.

நெருக்கி நடுவதைத் தவிர்த்தல் மற்றும் பட்டம் விட்டு நடுதல். விளக்குப்பொறி மூலம் பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து அவற்றின் எண்ணிக்கை பொருளாதாரச் சேதநிலையைத் தாண்டினால், பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்துதல். நோயுற்ற பயிர்களை உடனே பிடுங்கி அகற்றுதல். 3% வேப்பெண்ணெய் அல்லது 5% வேப்பங்கொட்டைக் கரைசலைப் பயன்படுத்துதல்.

20% சாணக் கரைசலைப் பயன்படுத்தி, பாக்டீரியா இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்துதல். 10% நொச்சி அல்லது காட்டாமணக்கு இலைச்சாற்றைத் தெளித்து நெல் நிறமாற்ற நோயைக் கட்டுப்படுத்துதல். 5% வசம்புக் கரைசலைத் தெளித்து, கதிர்நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்.


குறுவை RAJA RAMESH N

முனைவர் இராஜா ரமேஷ்,

வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம்-614404, திருவாரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!