ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வெள்ளாடு வளர்ப்பு!

வெள்ளாடு goat 3 scaled

வெள்ளாடுகள் காலங்காலமாக மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் தீவனத்தைப் பொறுத்து இவை காடுகளின் எதிரி என்னும் கருத்தும் உள்ளது. தமிழகத்தில் இன்றளவும் பல ஊர்களில் வெள்ளாடு வளர்ப்புக்கு ஊர்க் கட்டுப்பாடு மற்றும் தடை உள்ளது.

இதற்குக் காரணம், அவை பயிர்களையும் மரங்களையும் சேதப்படுத்தும் என்பது தான். அதனால், ஒருங்கிணைந்த பண்ணை வளர்ப்பு முறையில் வெள்ளாடு வளர்ப்பு சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது.

வெள்ளாடுகளை வளர்ப்பதன் பயன்கள்

வேளாண்மையில் கிடைக்கும் உபரி இலை தழைகள் ஆடுகளுக்குத் தீனியாவதால் தீவனச் செலவு குறையும். ஆட்டுப் புழுக்கையும் சிறுநீரும், நிலத்துக்கு உரமாகும்.

ஆடுகளால் பயிர்களுக்குச் சேதம் ஏற்படாத வகையில் பண்ணை அமைக்கப்படும். களைச் செடிகள் மற்றும் புதர்களை ஆடுகள் மேய்ந்து கட்டுப்படுத்தும். சத்துச் சுழற்சி சிறப்பாக நடைபெறும். ஆடு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். நிலையான பண்ணையத்துக்குக் கை கொடுக்கும்.

நெல் சாகுபடியுடன் வெள்ளாடு வளர்ப்பு: தஞ்சையில் நடத்தப்பட்ட ஆய்வில், திரும்பத் திரும்ப நெல் நடவு செய்வதைக் காட்டிலும், நெல் ஒரு போகம் பிறகு பருத்தி மற்றும் தீவனப் புல்லுடன் கொட்டில் முறையில் தலைச்சேரி இனத்தைச் சேர்ந்த ஐந்து பெட்டை மற்றும் கிடாவை ஒருங்கிணைத்துப் பண்ணையம் செய்வதன் மூலம் கூடுதல் வருவாய், கூடுதல் வேலை நாட்கள் கிடைத்துள்ளன.

அதாவது, 109 வேலை நாட்கள் மற்றும் ஆட்டெருவைப் பருத்திப் பயிருக்கு இட்டதால் ஒரு எக்டரில் 18.89 குவிண்டால் பருத்தி மகசூலாகக் கிடைத்துள்ளதை அறிய முடிகிறது.

மானாவாரி சோளத்துடன் வெள்ளாடு வளர்ப்பு: ஒரு எக்டர் நிலத்தில், 0.8 எக்டரில் தானியச் சோளம், 0.20 எக்டரில் தீவனச் சோளத்தைப் பயிரிட்டு, சோளத் தட்டையை உலர் தீவனமாகவும்,

தானியச் சோளத்தைக் குருணையாகவும் அரைத்து, 20 தலைச்சேரி பெட்டை ஆடுகளுடன் ஒரு கிடாயைக் கொட்டில் முறையில் வளர்ப்பதன் மூலம், நிகர பண்ணை வருவாய் 25 சதம் வரை கூடுதலாகக் கிடைக்கும்.

மீனுடன் வெள்ளாடு வளர்ப்பு: ஒரு எக்டர் நிலத்தில், 0.90 எக்டரில் நெல்-எள்- மக்காச்சோளம் அல்லது நெல்-சோயா மொச்சை- சூரியகாந்தி சாகுபடியையும், 0.10 எக்டர் பண்ணைக் குட்டையில் மீன்களையும்,

குட்டையின் பக்கவாட்டில் கொட்டில் முறையில் 20 வெள்ளாடுகளையும் வளர்ப்பதால் நிகர வருவாய் கூடுதலாகக் கிடைக்கும். ஆட்டுப் புழுக்கை நிலத்துக்கு உரமாகவும், மீன்களுக்கு உணவாகவும் பயன்படும்.

பட்டுப்புழு வளர்ப்புடன் வெள்ளாடு வளர்ப்பு: பட்டுப்புழு வளர்ப்புக்கு மல்பெரி சாகுபடி மிகவும் அவசியம். மல்பெரி இலைகள் வெள்ளாடுகளுக்கும் சிறந்த பசுந்தீவனமாகும்.

எனவே, மல்பெரி சாகுபடி விவசாயிகள் வெள்ளாடுகளைச் சேர்த்துப் பராமரித்தால், இயற்கை உரமும், கூடுதல் வருமானமும் ஆடுகள் மூலம் கிடைக்கும்.

வெள்ளாடுகளுடன் நாட்டுக்கோழி வளர்ப்பு: கொட்டில் முறையில் பரண் மேல் வெள்ளாடுகளை வளர்ப்பவர்கள், பரணுக்குக் கீழே நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம்.

திறந்திருக்கும் பரண் தரையை வலையால் அடைத்து நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம். இதனால், ஆடுகளைத் தாக்கும் உண்ணி மற்றும் பேன்கள் குறைவதோடு, கோழி இறைச்சி, முட்டை விற்பனை மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மாந்தோப்பில் வெள்ளாடு வளர்ப்பு: நன்கு வளர்ந்த மாந்தோப்பில் மரங்களுக்கு இடையே முளைக்கும் புல், பூண்டு, செடி கொடிகள் மற்றும் உதிரும் இலைகளைக் கொண்டு, மேய்ச்சல் முறையில் வெள்ளாடுகளை வளர்த்துப் பயன் பெறலாம்.

ஒரு எக்டர் நிலத்தில் ஐந்து ஆடுகள் வரையில் வளர்க்கலாம். மேய்ச்சல் முறையில் அல்லாமல், மர நிழலில் வளரும் தீவனப் பயிர்களான கலப்பக் கோனியம், முயல் மசால், சோளம் போன்ற பயிர்களை ஊடுபயிராக இட்டு, கொட்டில் முறையிலும் வெள்ளாடுகளை மாந்தோப்பில் வளர்க்கலாம்.

தென்னந்தோப்பில் ஆடு வளர்ப்பு: தென்னை மரங்களுக்கு இடையே சவுண்டல், அகத்தி, கினியாப்புல் போன்ற தீவனப் பயிர்களை சாகுபடி செய்து, கொட்டில் முறையில் வெள்ளாடுகளை வளர்க்கலாம்.

ஆட்டெரு தென்னைக்குச் சிறந்த ஊட்டமாக அமையும். இந்த ஊடுபயிர்களால் தென்னை மரங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

பயிரிடும் நிலத்தைச் சுற்றி, உயிர்வேலியாகச் சவுண்டல், கிளைரிசிடியா, அகத்தி, சித்தகத்தி, கல்யாண முருங்கை போன்ற மரக்கன்றுகளை நட்டு, அவற்றின் தழைகளைத் தீவனமாக அளித்து ஆடுகளை வளர்க்கலாம்.

சில குறிப்புகள்

வெள்ளாட்டு இனங்கள்: தலைச்சேரி, கன்னி, பள்ளையாடு பார்பாரி, சேலம் கறுப்பு, நாட்டாடுகள்.

கொட்டில் வசதி: பெட்டை ஆட்டுக்கு ஒரு சதுர மீட்டர், கிடாவுக்கு 2 சதுர மீட்டர், வளரும் குட்டிக்கு 0.3 சதுர மீட்டர் இடவசதி இருக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்ய 20 பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா வீதம் வளர்க்க வேண்டும்.

பருவ வயது: கிடா 12-15 மாதம், பெட்டை 10-12 மாதம். சினைக்காலம்: 145-155 நாட்கள். ஈனுதல்: இரண்டு ஆண்டில் மூன்று ஈற்றுகள்.

குட்டிகளைத் தாயிடம் இருந்து பிரித்தல்: பிறந்த 2-3 மாதங்களுக்குப் பிறகு.

தினசரி தீவனத் தேவை

வளரும் குட்டிக்கு, அடர் தீவனம் 50-100 கிராம், பசுந்தீவனம் 1 கிலோ, இலைதழை 1 கிலோ தேவை. பெட்டையாட்டுக்கு, அடர் தீவனம் 150-200 கிராம், பசுந்தீவனம் 2.5 கிலோ, இலைதழை 2.5 கிலோ தேவை.

பொலி கிடாவுக்கு, அடர் தீவனம் 200-250 கிராம், பசுந்தீவனம் 3 கிலோ, இலை தழை 3 கிலோ தேவை. போதியளவில் குடிநீர் இருக்க வேண்டும். கோடையில் தினமும் ஆட்டுக்கு 5 லிட்டர், மற்ற சமயத்தில் 3 லிட்டர் வீதம் குடிநீர் கிடைக்க வேண்டும்.

நோய்த்தடுப்பு முறைகள்: தேவைக்கேற்ப 4-5 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்துகளை ஆடுகளுக்குத் தர வேண்டும். உரிய தடுப்பூசிகளை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி ஆடுகளுக்குப் போட வேண்டும்.


வெள்ளாடு V.SANGEETHA

முனைவர் வி.சங்கீதா, முனைவர் நேதாஜி மாரியப்பன், முனைவர் மு.புனிதாவதி, வேளாண்மை அறிவியல் நிலையம், பெரம்பலூர்.

முனைவர் பெ.மோகனா, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading