துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி!

red chilli pepper plant, very hot!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021

வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில், புதுப்புது பயிர் இரகங்களும், உத்திகளும் வந்து கொண்டே உள்ளன. இவற்றைத் தங்களின் நிலத்தில் செயல்படுத்தினால், தரமான மற்றும் கூடுதலான மகசூலை எடுக்க முடியும். இவ்வகையில், துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி குறித்து இங்கே காணலாம்.

தரமான நாற்று உற்பத்தி

பாதுகாப்பான நாற்றங்கால்: நாற்றங்காலுக்கு 50% நிழல்வலை போதும். ஒரு மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுள்ள மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். நாற்றுகளைக் குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும். குழித்தட்டுகளில் பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு, வேப்பம் புண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

எக்டருக்கு 200 கிராம் மிளகாய் விதை போதும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் வீதம் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 200 கிராம் வீதம் அசோஸ்பைரில்லத்தைக் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதைத்த ஆறு நாட்களுக்குப் பிறகு குழித்தட்டுகளை மேட்டுப்பாத்திகளில் வைக்க வேண்டும். விதை முளைக்கும் வரை தினமும்  2 முறை பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் கலந்து, விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு தெளிக்க வேண்டும். விதைத்த 18 நாட்களுக்குப் பின் 19:19:19 மற்றும் 0.5% மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும். அல்லது நுண்ணூட்டக் கலவையை ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். 35 நாட்களில் மிளகாய் நாற்றுகள் நடவுக்குத் தயாராகி விடும்.

நடவு

முதலில் நிலத்தை உளிக் கலப்பையால் உழ வேண்டும். பின் சட்டிக் கலப்பையால் உழ வேண்டும். அடுத்துக் கொக்கிக் கலப்பையால் இரண்டு முறை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 25 டன் தொழுவரத்தை அடியுரமாக இட வேண்டும். 375 கிலோ சூப்பர் பாஸ்பேட்டையும் கடைசி உழவின் போது அடியுரமாக இட வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை, எக்டருக்குத் தலா 2 கிலோ வீதம் எடுத்து, 50 கிலோ தொழுவுரம், 100 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இட வேண்டும்.

கடைசி உழவுக்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை எக்டருக்கு 2.5 கிலோ வீதம் எடுத்து 100 கிலோ தொழுவுரத்துடன் கலந்து இட வேண்டும். நடவு வயலில் 120 செ.மீ. அகல மேட்டுப் பாத்திகளை 30 செ.மீ. இடைவெளியில் அமைத்து, சொட்டுநீர்ப் பாசனப் பக்கவாட்டுக் குழாய்களைப் பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு அமைக்க வேண்டும். நடுவதற்கு 8-12 மணி நேரத்துக்கு முன், நடவு வயலை சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நனைக்க வேண்டும்.

நடவுக்கு முன் எக்டருக்கு 1 லிட்டர் வீதம் பெண்டிமித்திலின் அல்லது ஃப்ளூக்ளோரலின் களைக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். 35 நாள் மிளகாய் நாற்றுகளை இரு வரிசை நடவு முறையில் 90x60x45 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். நடவுக்கு முன் 0.5% சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடம் நனைக்க வேண்டும். 16 மிளகாய் நாற்று வரிசைகளுக்கு ஒரு வரிசையில் 40 நாள் செண்டுமல்லி நாற்றுகளை நட வேண்டும். நடவு செய்த ஏழாம் நாள் சத்துகளை நிரப்ப வேண்டும்.

கரையும் உரப்பாசனம்

நடவு செய்த மூன்றாம் நாள் முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் எக்டருக்கு 120:80:80 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை, கரையும் உரப்பாசன முறையில் செடியின் வளர்ச்சிக்காலம் வரை கொடுக்க வேண்டும்.

பின்செய் நேர்த்தி

0.5% சூடோமோனஸ் புளோரசன்சை 15 நாட்கள் இடைவெளியில் இலைகள் மீது தெளிக்க வேண்டும். நடவு செய்த 30, 60 ஆம் நாள் களையெடுக்க வேண்டும். நுண்ணூட்டக் கலவையை எக்டருக்கு 500 கிராம் வீதம், நடவு செய்த 40, 80, 120 ஆகிய நாட்களில் தெளிக்க வேண்டும். நீரில் கரையும் 19:19:19 மற்றும் ஒரு சத மாங்கனீசு மற்றும் பொட்டாசிய நைட்ரேட் வீதம், நடவு செய்த 60, 100 ஆம் நாளில் தெளிக்க வேண்டும்.

நடவு செய்த 15, 30 ஆம் நாளில் டிரைகாண்டனால் என்னும் வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் நீருக்கு 1.25 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 0.25 மில்லி பிளானோஃபிக்ஸ் வீதம் கலந்து, 45, 60, 90 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்.

அறுவடையும் சேமிப்பும்

நன்கு முதிர்ந்த காய்களை நான்கு நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும். காய்களின் அளவைப் பொறுத்து, தரம் பிரித்து நெகிழிப் பெட்டிகளில் நிரப்ப வேண்டும். சிறிய, வளைந்த, உருமாறிய காய்களைத் தனியாகப் பிரிக்க வேண்டும். 


ALAGU KANNAN

முனைவர் பு.அழகுக்கண்ணன்,

இராஜா ஜோஸ்லின், இராஜ்கலா, திருமலைவாசன், அசோக்குமார், சோபனா,

வேளாண்மை அறிவியல் நிலையம், சோழமாதேவி, அரியலூர்-612902.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!