பூனைக்குச் சோறு போடலாமா?

பூனை Cat03

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன்.

பார்ப்பதற்கு அழகும், அடர்ந்த உரோமங்களும், விளையாடி மகிழ்விக்கும் தன்மையும், தூய்மையும் கொண்டிருப்பதால் வீடுகளில் செல்லப் பிராணியாகப் பூனைக் குட்டிகள் வளர்க்கப்படுகின்றன.

பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலிகளின் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை வளர்க்கிறார்கள்.

இப்படிப்பட்ட பூனைக்கு என்ன உணவு, எவ்வளவு அளிக்க வேண்டும் என்னும் கேள்வி, புதிதாய் பூனையை வளர்ப்போருக்கும், பல ஆண்டுகள் வளர்த்தவர்களுக்கும் சந்தேகம் வரலாம். அந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்கான குறிப்புகளை இங்கே காணலாம்.

பூனையின் உணவுப் பழக்கம் நாயிடமிருந்து வேறுபடும். அது, அசைவம் மட்டுமே உண்ணும். பொதுவாக, பூனை சிறு விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்காகும்.

அதிகமான புரதம், மிதமான கொழுப்பு மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் உள்ள இரையைச் செரிப்பதற்கு ஏற்ற வகையிலேயே இதன் உடல் அமைந்துள்ளது.

மேலும், தாவர உணவுகளைச் செரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அமைலேஸ் போன்ற முன் செரிமான நொதி, உமிழ் நீரில் இல்லாததால் கடினமான மாவுச்சத்தை வாயில் நொதிக்க இயலாது.

எனவே, குடலில் செரிக்க அதிக நேரம் எடுக்கும். மேலும், முற்றிலும் செரிக்காத மலம் நாற்றத்துடன் வெளிப்படும்.

சிறந்த கண் பார்வைக்கும், இதயத்தசை இயக்கம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கும் டயூரின் சல்பர் சத்து நிறைந்த அமைனோ அமிலம் அவசியம். டயூரினைப் பூனையால் உற்பத்தி செய்ய இயலாது.

ஆகையால், பூனைக்கு இறைச்சியைச் கொடுப்பதன் மூலம் டயூரின் தேவையைச் சரி செய்யலாம். கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்தும், மற்றொரு முக்கியமான தாதுப்பு வகையைச் சேர்ந்த சத்தாகும்.

ஒருவேளை, உங்களின் பூனை, இறைச்சியில் உள்ள எலும்புத் துண்டுகளையும் இறைச்சியையும் உண்ணத் தவறினால், உங்கள் பூனையின் உணவைச் சத்தானதாக மாற்றிட, எலும்பு மசால் மற்றும் டயூரின் பொடியை, அதன் அன்றாட உணவில் கலந்து கொடுக்கலாம்.

நல்ல உடல் நலத்துக்குத் தேவை சத்தான உணவுப் பழக்கமாகும் என்பது பூனைகளுக்கும் பொருந்தும். சத்தானது என்றால், அது அதிக இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட புரதமாகவே இருக்கும்.

அதாவது, ஆட்டிறைச்சி, மீன், கோழி மற்றும் குறைந்த அளவே தாவரப் புரதம் உடையதாகும். அதாவது, 10 சதமே தாவரப் புரதம் இருக்க வேண்டும். 3‐4 கிலோ எடையுள்ள பூனைக்கு 240 கலோரி சக்தி தினமும் தேவைப்படுகிறது. பூனையின் உணவில் 80 சதம் தசைக்கறி, 10 சதம் உறுப்புக்கறி (பாதி கல்லீரல்), 10 சதம் எலும்பு இருக்க வேண்டும்.

உணவு முறை

சராசரியாக ஒரு பூனைக்குத் தரவேண்டிய அடிப்படை உணவு, அதன் உடல் எடையில் 2‐4 சதமாகும். ஆனால், பூனையின் உணவு அதன் எடை மட்டுமின்றி அதன் வயது, செயல்படுதிறன், வளர்சிதை மாற்றம், சினைப்பருவம், பசி ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடும். நன்கு வளர்ந்த பூனைகளுக்குத் தினமும் 1‐2 முறை உணவிட வேண்டும்.

குட்டிகள் அதிகம் சுறுசுறுப்பாக விளையாடுவதாலும், வேகமாக வளர்வதாலும் அவை அடிக்கடி உண்ணும். 3‐4 மாதக் குட்டிகள் ஒருநாளில் நான்கு முறை உண்ணும். வளர்ந்த பூனைகள் அவற்றின் வயிற்றில் அதிக உணவைச் சேமிக்க முடியும்.

ஆதலால், பெரிய பூனைகளுக்கு அடிக்கடி உணவளிக்கத் தேவையில்லை. உடல் பருமன் பூனைகளிடம் காணப்படும் பொதுவான பிரச்சனையாகும். அதிக உடல் பருமனான பூனைகளுக்கு நீரிழிவு, சுவாசக் கோளாறு, இதயம் மற்றும் தசைகளில் கோளாறு ஏற்படும்.

உடல் பருமனுக்குக் காரணம்

சரிவிகித உணவில்லாமல் அதிகளவில் அதிக சக்தியைத் தரக்கூடிய உணவைப் பூனைகள் உண்பதே உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாகும். அத்தகைய உணவுகள் குடலில் சரிவரச் செரிப்பதில்லை.

மேலும், இது நீரிழிவு நோயை ஏற்படுத்துவதுடன், உடல் எடையையும் அதிகரிக்கும். இந்தச் சூழ்நிலையில் நல்ல கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி, பூனையின் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

செல்லப் பிராணிகளுக்காக விற்கப்படும் உலர் உணவானது விலங்குப் புரதத்தை மட்டும் கொண்டதாக இருப்பதில்லை, அவற்றில் தாவரப் புரதமும் இருக்கும். ஆகையால், இந்த உலர் உணவு பூனைகளுக்கு உகந்தது இல்லை.

உலர் உணவை உண்ணும் பூனைகளுக்குச் சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்சனை, அதாவது, சிறுநீரகக் குழாயில் அடைப்பு, கல் உருவதால் மற்றும் நுண்ணுயிரிகளின் தாக்கம், வயிற்று எரிச்சல், உடல் பருமன், பல் நோய், ஆஸ்துமா மற்றும் பல நோய்கள் ஏற்படும்.

மேலும், சில சமயம் பூனைகள், வீட்டிலுள்ள பருப்பு, பட்டாணி போன்ற தாவரப் புரதம் நிறைந்த பொருள்களை உண்ண விடுகின்றனர். இப்படிச் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கிண்ணத்திலிருந்து நீரைக் குடிக்க பூனைகளைப் பயிற்றுவிப்பது அவசியம். முறையான தேவைக்கேற்ற நீரேற்றம் மிகவும் முக்கியம். அது, குறிப்பாக உணவிலுள்ள சத்துகளைச் சீரண மண்டலத்தில் இருந்து உறிஞ்சி, தேவைப்படும் பகுதிக்கு எடுத்துச் செல்ல அவசியம்.

மேலும், சிறுநீரக மண்டலம் நன்றாக இருக்கவும், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றைக் குறைக்கவும் உதவுகிறது. பூனைகள் அதிகமாக நீரை அருந்துவது இல்லை. தமது நீர்த் தேவையைத் தமது உணவிலுள்ள நீரிலிருந்தே சரி செய்து கொள்கின்றன.

வனவிலங்காக உள்ள காட்டுப் பூனைகள் தமது நீர்த்தேவையை வேட்டையாடிய உணவிலிருந்து பெற்றுக் கொள்கின்றன. எ.கா. சிறிய விலங்குகள், பறவைகள், நிலநீர் வாழ்வன, தவளைகள் மற்றும் பூச்சிகள். இத்தகைய மாமிச உணவுகள் 70‐75 சதம் நீரைக் கொண்டுள்ளன.

வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளின் உணவானது, 7‐10 சதம் நீருள்ள உலர் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத உணவாகும். ஆதலால், பூனையின் நீர்த்தேவை உண்ணும் உணவைப் பொறுத்து வேறுபடும்.

சராசரியாக ஒரு கிலோ எடையுள்ள பூனைக்குத் தினமும் 60 மி.லி. நீர் மட்டுமே தேவை. வலியுறுத்தும் போது மட்டுமே நீரை அருந்தும். இல்லாவிட்டால் நாள் முழுக்கக் கூட நீரைத் தொடாமல் இருக்கும்.

சில பூனைகள் மட்டுமே கிண்ணத்தில் உள்ள நீரைக் குடிக்கும். அதுவும் நீரைத் தெளித்துக் விளையாடுவதற்காக. சில பூனைகள் தரையில் உள்ள நீரையே குடிக்கும்.

காட்டுப் பூனைகள் ஓடும் நீரை மட்டுமே குடிக்கும். எனவே, ஏதாவது ஒரு முறையில் உங்கள் பூனையை நல்ல நீரேற்ற நிலையில் வைத்திருப்பது அவசியம்.

கிண்ணத்தில் இருந்து நேரடியாக நீரைக் குடிக்கப் பூனைகளைப் பழக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை: நீர்க் கிண்ணத்தை உணவுக்குப் பக்கத்தில் வைக்காமல் மறைவான இடத்தில் வைக்க வேண்டும்.

பூனைகள் குளிர்ந்த நீரையே விரும்பும். ஒருவேளை உங்கள் பூனைக்கு நீங்கள் கொடுக்கும் நீரின் வெப்பத்தைப் பிடிக்க வில்லை என்றால், நீர்க் கிண்ணத்தில் சில ஐஸ் கட்டிகளைச் சேர்த்துக் கொடுக்கலாம்.

நீர்ப் பாத்திரத்தைப் பற்றிப் பார்க்கலாம். பிளாஸ்டிக், உலோகம், பீங்கான், ரப்பரில் இருக்கலாம். பூனைகள் நகரும் நீரைக் குடிக்க விரும்புவதால் நீரைத் தொடர்ந்து சுழற்றும் நீரூற்றுகளைப் பயன்படுத்தலாம். பூனைக்கென்றே வடிவமைக்கப்பட்ட நீருற்றுகள் உள்ளன.

பூனைக்கு உணவிடும் போது கவனிக்க வேண்டியவை

உலர்ந்த மற்றும் அரைத்த உணவை விடப் பச்சையான இறைச்சியே நல்லது. வேக வைக்காத பச்சை மாமிசம், எலும்பு, தசைகளைப் பூனைகளுக்குக் கொடுப்பதால், அவற்றின் பற்கள் தூய்மையாகவும், வலுவுடனும் இருக்கும்.

அரைத்த உணவைக் கொடுத்தால் பூனைகள் வேகமாக உண்ணும். அதனால், உணவு இரைப்பையை விரைவில் சென்றடையும். போதிய நேரம் இல்லாததால் செரிமான அமிலங்கள் சுரப்பதில்லை. எனவே, உணவு சரிவரச் செரிக்காமல், வாந்தி மற்றும் பேதியை ஏற்படும்.

மனித உணவைப் பூனைக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பூனை விரும்பினாலும் பூனைகளுக்குப் பாதுகாப்பானது இல்லை. குறிப்பாக, வெங்காயம், பூண்டு, திராட்சை, இனிப்புத் தின்பண்டங்கள், சாக்லேட், காபி போன்றவை கூடவே கூடாது.


பூனை Malarmathy

மு.மலர்மதி, அ.யசோதா, வ.செ.வடிவு, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி,
சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading