மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017

ருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள், தென்னிந்தியச் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்ப் பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது. இதன் காரணமாக இது பலவகையான அழகுப் பொருள்கள் தயாரிப்பில்  பயன்படுகிறது. மேலும், துணிகளுக்குச் சாயமேற்றவும் மஞ்சள் பயன்படுவதால், சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இரகங்கள்

கோ.1, கோ.2, பிஎஸ்ஆர் 1, பிஎஸ்ஆர் 2, ஈரோடு உள்ளூர் இரகம், சேலம் உள்ளூர் இரகம் ஆகியவை தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்தவை.

பருவம்

கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரை, 20-30 செல்சியஸ் வெப்பநிலை, ஆண்டு மழையளவு 1,500 மி.மீ. வரையுள்ள வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் மஞ்சளைச் சாகுபடி செய்யலாம். ஏப்ரல் மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை நடவு செய்யலாம். எனினும், ஜூன் மாதத்தில் நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.

மண்

நல்ல வடிகால் வசதியும் அங்ககச் சத்தும் நிறைந்த இருபொறை மண் மிகவும் ஏற்றது. பொலபொலப்புத் தன்மை வாய்ந்த செம்மண், வண்டல் மண், களிமண் நிலங்களிலும் வளரும். அமில காரநிலை 6-7 இருக்கும் நிலங்களில் பயிரின் வளர்ச்சியும் மகசூலும் நன்றாக இருக்கும். அதிகமாக நீர் தேங்கும் நிலங்களிலும், காரத்தன்மை வாய்ந்த நிலங்களிலும், மஞ்சள் வெகுவான பாதிப்புக்கு உள்ளாகும். கரடுமுரடான மற்றும் கற்கள் நிறைந்த நிலங்களில் கிழங்கின் வளர்ச்சியானது பாதிக்கப்படும்.

மஞ்சள் கிழங்கு நேர்த்தி

தரமான மஞ்சள் கிழங்குகளைத் தேர்வு செய்து அவற்றை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பென்டாசிம் மற்றும் 1.5 மில்லி மோனோ குரோட்டோபாஸ் வீதம் கலந்த கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து வைக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், கிழங்கு அழுகல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை மற்றும் செதில் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிரைப் பாதுகாக்க முடியும்.

குழித்தட்டு நாற்று உற்பத்தி

காய்கறிப் பயிர்கள் மற்றும் கரும்பைப் போல, குழித்தட்டுகளைப் பயன்படுத்தி நாற்றுகளை உற்பத்தி செய்தும் மஞ்சளை நடலாம். இதற்கு, நேர்த்தி செய்யப்பட்ட கிழங்குகளைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒவ்வொரு துண்டும் இரண்டு வளையங்கள் மற்றும் ஒரு கணுவுடன் இருக்க வேண்டும். இப்படி நறுக்கப்படும் மஞ்சள் துண்டு ஒன்றின் எடை தோராயமாக 5 கிராம் இருக்கும். ஐம்பது குழிகள் உள்ள குழித்தட்டுகளை மஞ்சள் நாற்று உற்பத்திக்குப் பயன்படுத்தலாம்.

ஓர் ஏக்கருக்குத் தேவையான மஞ்சள் நாற்றுகளை உற்பத்தி செய்ய, சுமார் 600 குழித்தட்டுகள் தேவைப்படும். மட்கிய தென்னைநார்க் கழிவுடன் டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் புளூரசன்ஸை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் கலந்து குழித்தட்டுகளில் உள்ள குழிகளில் பாதியளவு நிரப்பி, நறுக்கப்பட்ட மஞ்சள் துண்டுகளை, கணுப்பகுதி மேல்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். பிறகு, இதன் மீது தென்னைநார்க் கலவையை இட்டு நிரப்பி, நிழலான இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும்.

பூவாளி அல்லது கைத்தெளிப்பான் மூலம் ஒரு நாளைக்கு ஒருமுறை நீர் தெளிக்க வேண்டும். அனைத்துக் குழிகளிலும் ஒரு இலை வெளிவந்த பிறகு ஹியூமிக் அமிலத்தை, ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். நாற்பதாவது நாளில் நாற்றுகளைப் பிடுங்கி நடவு செய்யலாம். குழித்தட்டுகளை நீரில் கழுவி நிழலில் பாதுகாப்பாக வைத்திருந்தால் மூன்று ஆண்டுகள் வரையில் பயன்படுத்தலாம்.

குழித்தட்டு நாற்றுகளின் நன்மைகள்

விதைக் கிழங்குகளின் தேவை குறைகிறது. அதாவது, ஏக்கருக்கு 150 கிலோ கிழங்குகள் போதும். வயலில் இருக்கும் காலம் குறைவதால் கணிசமான அளவு நீரும் மின்சாரமும் மிச்சமாகும். ஒருமுறை களை எடுப்பதற்கான செலவு குறைகிறது. சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும்.

நிலத் தயாரிப்பும் நடவும்

ஏக்கருக்கு 4 டன் தொழுவுரத்தை இட்டு அல்லது ஆடு மாடுகளைக் கொண்டு கிடைகட்டி உழ வேண்டும். மண் நன்கு பொடியாகும் வரை மூன்று முதல் நான்கு முறை ஒரு அடி ஆழம் வரை உழ வேண்டும். 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து நீரைப் பாய்ச்சி ஈரம் இருக்கும் பொழுது 30 செ.மீ. இடைவெளியில் மஞ்சள் நாற்றுகளை நட வேண்டும். டிரைக்கோடெர்மா ஹார்சியானம் என்னும் எதிர் உயிர்ப் பூசணத்தை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து, எருவுடன் கலந்து நிலத்தில் ஈரம் இருக்கும் போது தூவி விடலாம்.

ஊடுபயிர்

வெங்காயம், கத்தரி, மிளகாய் போன்ற பயிர்களை மஞ்சளில் ஊடுபயிராக இடலாம். மஞ்சளானது நிழலை விரும்பும் பயிராகும். ஆனால், அதிக நிழல், கிழங்கின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனால், வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, அகத்தி, துவரை போன்ற பயிர்களைப் பயிரிடலாம்.

நீர் நிர்வாகம்

மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை மற்றும் கால நிலையைப் பொறுத்து 5-9 நாட்களுக்கு ஒருமுறை நீரைப் பாய்ச்சலாம். களிமண் பாங்கான நிலத்தில் 15-20 முறையும், மணற்பாங்கான நிலத்தில் 30-35 முறையும் பாசனம் செய்ய வேண்டும். கிழங்குகள் உருவாகும் சமயத்தில் பாசனக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உர மேலாண்மை

அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை, பார்களை அமைப்பதற்கு முன்பு இட வேண்டும். பார்களை அமைத்த பிறகு, 12 கிலோ பெரஸ் சல்பேட் 6 கிலோ துத்தநாக சல்பேட் உரங்களை, பார்களின் மீது தூவிவிட வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஏக்கருக்கு 4 கிலோ வீதம் எடுத்து, நிலத்தில் ஈரம் இருக்கையில் தூவிவிட வேண்டும். நடவு செய்த 30, 60, 90 மற்றும் 120 நாளில், ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.

நுண்ணூட்ட மேலாண்மை

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மஞ்சள் பயிருக்கென்று தனி நுண்ணூட்டக் கலவையைத் தயாரித்து வழங்கி வருகிறது. ஐஐஎஸ்ஆர் பவர் மிக்ஸ் எனப்படும் இந்த நுண்ணூட்டக் கலவையை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம், நடவு செய்த 60 மற்றும் 90 நாளில் இலைவழியாகத் தெளிப்பதன் மூலம், நுண்சத்துக் குறைகளைப் போக்கி, 10-15 சதம் கூடுதல் மகசூலைப் பெறலாம். மேலும், கிழங்குகளின் தரமும் நன்றாக இருக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு

பூச்சிகள்: தண்டுத் துளைப்பான்: தண்டுப்பகுதியில் துளையிட்டு உள்ளே செல்லும் புழுக்கள், குருத்துப் பாகத்தைக் கடித்து உண்ணும். பாதிக்கப்பட்ட குருத்து, மஞ்சள் நிறமாகிக் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, ஜூலை முதல் அக்டோபர் வரை, மாதம் ஒருமுறை மாலத்தியான் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

செதில் பூச்சி: பயிரில் சாற்றை உறிஞ்சிச் சேதத்தை ஏற்படுத்தும். இலைகள் துவண்டிருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு மில்லி டைமெத்தோயேட் மருந்து வீதம் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்றலாம். அல்லது கார்போபியூரான் குருணை மருந்தை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் இடலாம்.

இலைப்பேன்: இலைகளில் சாற்றை உறிஞ்சி மஞ்சள் நிறமாக மாற்றி விடும். மீத்தைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளித்து இதைக் கட்டுப்படுத்தலாம்.

நூற்புழு: இலைகள் நுனியிலிருந்து காயத் தொடங்கும். செடியின் வளர்ச்சிக் குன்றியிருக்கும். வேர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, கார்போபியூரான் குருணை மருந்தை, ஏக்கருக்கு 4 கிலோ வீதம் எடுத்து, செடிகளைச் சுற்றியிட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும். அடியரமாக ஏக்கருக்கு 80 கிலோ வேப்பம் புண்ணாக்கையும், மேலுரமாக யூரியாவை இடும் போது 10 கிலோ வேப்பம் புண்ணாக்கையும் பயன்படுத்த வேண்டும்.

கிழங்கு அழுகல் நோய்: நன்கு வளர்ந்த நிலையில் இலைகள் முழுவதும் காய்ந்து விடும். கிழங்குகள் அழுகி மட்கி விடும். பாதிக்கப்பட்ட செடிகளை, கிழங்குடன் நிலத்திலிருந்து அகற்றி விட்டு, அந்த இடத்திலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள செடிகளுக்கும் காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் வீதம் கலந்து ஊற்றலாம். டிரைக்கோடெர்மா ஹார்சியானம் எதிர் உயிர்ப் பூசணத்தை எருவுடன் கலந்து நிலத்தில் தூவலாம்.

இலைப்புள்ளி நோய்: இளம் இலைகளின் மேற்பரப்பில் பழுப்புப் புள்ளிகள் தோன்றும். ஒழுங்கற்ற வடிவிலிருக்கும் இப்புள்ளிகளின் மையப்பகுதி வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். நாளடைவில் இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய புள்ளிகளாக இலை முழுவதும் பரவுவதால் இலைகள் மடிந்து விடும். இந்நோயைக் கட்டுப்படுத்த, புரோபிகோனசோல் பூசணக் கொல்லியை, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.

இலைத்தீயல் நோய்: நீள் உருளை அல்லது செவ்வக வடிவத்தில் பழுப்புப் புள்ளிகள் இலைகளின் இருபுறமும் காணப்படும். தாக்குதல் தீவிரமானால், புள்ளிகள் அடர் பழுப்பு நிறமாக மாற, இலைகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகி விடும். முறையான தடுப்பு நடவடிக்கையை எடுக்கா விட்டால் செடியில் உள்ள அனைத்துக் கிளைகளுக்கும் பரவி செடியே மடிந்து விடும்.

கிழங்கு உருவாவது வெகுவாகப் பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட இலைகளைச் செடியிலிருந்து அகற்றித் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். பிறகு, அசாஸிஸ்ட்ரோபின் மற்றும் டைபென்கோனசோல் கலவை பூசணக் கொல்லியை, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.

அறுவடை மற்றும் மகசூல்: இரகத்தைப் பொறுத்து நடவு செய்த 7-9 மாதங்களில் மஞ்சள் அறுவடைக்குத் தயாராகும். இச்சமயத்தில் தரைக்கு மேலுள்ள அனைத்துப் பாகமும் காய்ந்து மடிந்து விடும். இவற்றை அரிவாள் கொண்டு அறுத்து அகற்றி விட்டு, தேவை ஏற்பட்டால் நீரைப் பாய்ச்சி உலர விட்டு, பிறகு மஞ்சள் கொத்தும் கருவியால் கிழங்குகளைத் தோண்டி எடுக்கலாம். டிராக்டரில் இயங்கும் மஞ்சள் அறுவடைக் கருவி மூலமும் கிழங்குகளைத் தோண்டி எடுக்கலாம். பிறகு, கிழங்குகளில் இருக்கும் மண்ணை நீக்கி விட்டுப் பதப்படுத்தலாம். ஏக்கருக்கு 8-10 டன் மஞ்சள் கிழங்குகள் மகசூலாகக் கிடைக்கும்.


ஜெ.கதிரவன்,

சு.திவ்யா, இரா.வசந்தகுமார், வேளாண்மை அறிவியல் நிலையம்,

வாலிகண்டபுரம்-621115, பெரம்பலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!