சம்பா நெற்பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

fertilize samba paddy

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020

மிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27% பரப்பில் சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது.

தற்போது சம்பா நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து கொண்டே வருகிறது, பெருகி வரும் மக்கள் தொகையையும் தற்போதைய உற்பத்திக் குறியீட்டு அளவையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எதிர்வரும் ஆண்டுகளில் எக்டருக்குச் சராசரியாக 9 டன் விளைச்சல் என்னும் இலக்கைக் கட்டாயம் அடைய வேண்டும். சீரான விளைச்சல் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமானால், வேளாண் உத்திகளைச் சீரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.

இதற்கு, உயர் விளைச்சல் இரகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சீரிய முறையில் உழவியல், நீர் மேலாண்மை மற்றும் களை நிர்வாகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் பயிர்ப் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும்.

நெல் சாகுபடியில் இந்த உத்திகளில் ஒன்றான ஒருங்கிணைந்த உர நிர்வாகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஏனெனில், நெல் விளைச்சலில் சுமார் 40% உர நிர்வாகத்தைப் பொறுத்துள்ளது. ஒருங்கிணைந்த உர நிர்வாகம் என்பது, இயற்கை உரங்களான பசுந்தாள் உரம், தொழுவுரம், மண்புழு உரம், மட்கிய தென்னைநார்க் கழிவு; செயற்கை உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்; உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம் மற்றும் நுண்ணுரங்களைச் சேர்த்து, சமச்சீர் உணவாக அளிப்பதாகும்.

இதனால், நிலவளத்தைக் காத்து விளைச்சலைப் பெருக்கலாம். கோடையில் சணப்பை, தக்கைப்பூண்டைப் பயிரிட்டு மடக்கி உழுதால், மண்ணில் கரிமப் பொருள்களின் அளவு கூடுவதுடன், பயிருக்கு வேண்டிய தழைச்சத்தும் கிடைக்கும்.

அடியுரம்

உற்பத்தித் திறனைப் பெருக்க, ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம், 2 டன் மட்கிய குப்பை அல்லது மண்புழு உரம் ஆகியவற்றை இட்டு, மண்ணின் அங்ககத் தன்மையை நிலை நிறுத்த வேண்டும். இராசயன உரங்களை மண்ணாய்வு அடிப்படையில் வயலில் இட வேண்டும். மண்ணாய்வின் மூலம் மண்ணிலிருந்து பயிருக்குக் கிடைக்கக் கூடிய உரத் தேவையையும் தீர்மானிக்கலாம். இதனால், தேவைக்குக் குறைவாக அல்லது அதிகமாக உரமிடுவதைத் தவிர்க்கலாம்.

மண்ணாய்வைச் செய்யாத நிலையில், பொதுவான பரிந்துரைப்படி உரங்களை இட வேண்டும். காவிரி டெல்டா மற்றும் கோவைப் பகுதியில் பயிரிடப்படும் குறுவை நெல் இரகங்களுக்கு, ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்தும் 20 கிலோ மணிச்சத்தும் 20 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். இதர பகுதிகளில் ஏக்கருக்கு 48 கிலோ தழைச்சத்தும் 16 கிலோ மணிச்சத்தும் 16 சாம்பல் சத்தும் இட வேண்டும்.

இளம் நெற்பயிர் வேர்ப்பிடித்து வளர்ந்து, பூத்து, நன்கு மணிகள் பிடித்து, சீராக முதிர்ந்து மகசூல் பெருக மணிச்சத்து உதவுகிறது. இவ்வகையில், காவிரி டெல்டா மற்றும் கோவைப் பகுதியில் உள்ள குறுவைப் பயிர்களுக்கு, ஏக்கருக்கு 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 32 கிலோ யுரியா, 8 கிலோ பொட்டாஷை இட வேண்டும். இதர பகுதிகளில் ஏக்கருக்கு 100 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 26 கிலோ யூரியா, 6.6 கிலோ பொட்டாஷை இட வேண்டும்.

நுண்ணுரம்

இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துக்குறை உள்ள நிலத்தில், ஏக்கருக்கு 20 கிலோ இரும்பு சல்பேட் மற்றும் 10 கிலோ சிங்க் சல்பேட்டை, விதைப்பின் போது இடலாம். அல்லது வேளாண்மைத் துறையின் நுண்ணுரக் கலவை 5 கிலோவை, 20 கிலோ மணலுடன் கலந்து நடவுக்கு முன் அடியுரமாக இட வேண்டும்.

உயிர் உரம்

ஏக்கருக்கு 4 பொட்டலம் அசோஸ்பைரில்லம், 4 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியாவை, 10 கிலோ தொழுவுரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து வயலில் இட வேண்டும். நட்ட 3-5 நாட்களில் ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை இட்டு, களையெடுக்கும் போது மண்ணில் மிதித்து மட்கச் செய்ய வேண்டும். இது, காற்றிலுள்ள தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தி நெற்பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.

மேலுரம்

நெல் வளர்ச்சியில் தூர்கட்டும் பருவம், தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் பயிர்களுக்கு அதிகளவில் சத்துகள் தேவைப்படும். அதிகத் தூர்கள், அதிக மணிகள் மற்றும் மணிகள் சீராக முதிர்வதில், தழைச்சத்து முக்கியப் பங்காற்றுகிறது.

இலைவழி உரம்

இலைவழி உரமாக, யூரியா 1 சதம் + டிஏபி 2 சதம் + பொட்டாசியம் குளோரைடு 1 சதம் அடங்கிய கரைசலை, குருத்து உருவாகும் போதும் அடுத்துப் பத்து நாட்கள் கழித்தும் என இருமுறை தெளிக்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை ஒருங்கே கடைப்பிடித்து விலையுயர்ந்த இரசாயன உரங்களைச் செம்மையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தி, திட்டமிட்ட நெல் விளைச்சலைப் பெருக்கி, எல்லாருக்கும் எப்போதும் உணவு கிடைக்க வழிசெய்ய வேண்டும்.


PB_Anuradha

முனைவர் அ.அனுராதா,

முனைவர் மு.இராமசுப்ரமணியன், துரை நக்கீரன்,

வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர்-614404.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading