விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விதை seed 2

விதையே விவசாயத்தின் அடிப்படை. தரமான விதைகளைப் பயன் படுத்தினால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும்.

இந்த விதைகளில் இருந்து முளைக்கும் பயிர்களை, பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க, விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம்.

விதை நேர்த்தி என்பது, விதைகளை விதைப்பதற்கு முன், இரசாயனப் பூச்சிக் கொல்லி அல்லது எதிர் உயிர்ப் பூசணம் மற்றும் பாக்டீரியாக்களை, உயிர் உரங்களுடன் மேற்பூச்சு செய்வதாகும்.

விதை நேர்த்தியின் பயன்கள்

விதைகளின் முளைப்புத் திறன் கூடும். விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசண நோய்கள் கட்டுப்படும்.

பயிர்களின் நோயெதிர்ப்புத் திறன், வளர்ச்சி மற்றும் மகசூல் கூடும். விதை நேர்த்திக்குப் பயன்படும் நுண்ணுயிரிகள், மண்ணிலுள்ள கனிமப் பொருள்களைப் பயன்படுத்தி, பல மடங்காகப் பெருகிச் செடிகளுக்கு நீண்டகாலப் பாதுகாப்பைத் தரும்.

உயிர் உரங்களான அசோஸ் பயிரில்லம், ரைசோபியம் போன்றவை, பயிர்களுக்குத் தேவையான தழைச் சத்தையும், பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிட்டாத நிலையில் இருக்கும் மணிச் சத்தையும் கிரகித்து, பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும்.

நெல்லில் விதை நேர்த்தி

விதைகளின் முளைப்புத் திறன் குறைந்தது 80 சதத்துக்கு மேல் இருக்க வேண்டும். அதற்குச் சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நமது வயலில் அறுவடை செய்த நெல்லை விதையாகப் பயன்படுத்தும் போது, விதைகளை 1.2 சத உப்புநீரில், அதாவது, மூன்று கிலோ கல்லுப்பை 18 லிட்டர் நீரில் கரைத்த கலவையில் இட்டு, இந்தக் கரைசலில் மிதக்கும் எடை குறைந்த, தரமற்ற விதைகளை நீக்கி விட்டு, மூழ்கியுள்ள விதைகளை மட்டும் நன்கு கழுவி விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.

இரசாயனக் கொல்லி விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கார்பென்டாசிம் என்னும் பூசணக் கொல்லி மருந்தைக் கலந்து 24 மணி நேரம் வைக்க வேண்டும்.

பின், ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன், 500 கிராம் ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்த 200 கிராம் அசோஸ் பைரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா கலவையைக் கலக்க வேண்டும். பின், இந்தக் கலவையைக் குறைந்தது அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

உயிர் எதிர்க்கொல்லி விதை நேர்த்தி: உயிர் எதிர் பூசணக் கொல்லியான சூடோமோனாஸ் புளோரோ சன்ஸை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் நீரில் கலந்து, அதில் விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, மறுநாள் காலையில் வடிகட்டி, விதைகளை ஈரச் சாக்கிலிட்டு நிழலில் உலர்த்தி, 3 முதல் 5 மி.மீ. முளை வரும் வரை இருட்டறையில் வைத்திருந்து விதைக்க வேண்டும்.

விதைப்பதற்கு முன், இந்த விதைகளை, ஒரு பொட்டல அசோஸ் பயிரில்லம், ஒரு பொட்டல பாஸ்போ பாக்டீரியாவில் கலக்க வேண்டும்.

நாற்றின் வேர்களை நனைத்தல்: ஒரு கிலோ சூடோமோனாஸ் கலவையை 10 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள நீரில் கலந்து, அதில் ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளின் வேர்களைக் குறைந்தது அரைமணி நேரம் ஊற வைத்து நட வேண்டும். நீண்ட நேரம் ஊற வைத்தால் சூடோமோனாஸின் பயன் கூடும்.

சூடோமோனாஸ் என்னும் எதிர் உயிர் பாக்டீரியம், மண் மூலம் பரவும் நோய்கள், இலை மற்றும் நீர் மூலம் பரவும் பூசண நோய்களான குலை நோய், இலையுறைக் கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.

பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் சூடோமோனாஸ் செயல்படுவதால், பயிர்கள் செழித்து வளர்ந்து கூடுதல் மகசூலைத் தரும். இத்துடன், பயிர்களில் எதிர்ப்புத் திறனைக் கூட்டிப் பூச்சித் தாக்குதலையும் ஓரளவு குறைக்கும்.

பயறு வகைகளில் விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு இமிடா குளோபிரிட் 5 மில்லி வீதம் எடுத்துத் தேவையான நீரில் கலந்து, விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்த வேண்டும்.

பின்பு, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைக்க வேண்டும்.

இந்த விதை நேர்த்திக்குப் பின், ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா, 500 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சிக் கலவையில், ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளைக் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

உடனடியாக விதைக்க, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 5 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, ஒரு ஏக்கர் விதைக்கு ஒரு பொட்டல ரைசோபியம், ஒரு பொட்டல பாஸ்போ பாக்டீரியா, 500 மில்லி ஆறிய அரிசிக்கஞ்சி வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, இவற்றையெல்லாம் சேர்த்துக் கலந்த கலவையில், விதைகளைக் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நிலக்கடலையில் விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் மருந்தைக் கலக்க வேண்டும். இது, மண் மூலம் பரவும் நோய்களான வேரழுகல், வாடல் நோயிலிருந்து பயிரைப் பாதுகாக்கும்.

பின்பு, 24 மணி நேரம் கழித்து ரைசோபியம் ஒரு பொட்டலம், பாஸ்போ பாக்டீரியா ஒரு பொட்டலம் ஆகியவற்றை, 500 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து, இதில் விதைகளைக் கலக்கி 15 நிமிடம் நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்தில் விதைக்க வேண்டும்.

இந்த ரைசோபியம், பயிர்களுக்குக் கிடைக்காத நிலையில், காற்றிலுள்ள தழைச் சத்தைக் கிரகித்துப் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும்.

உடனடி விதைப்புக்கு, ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை, சூடோமோனாஸ் 500 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 200 கிராமுடன், ரைசோபியம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் ஆகியவற்றை, 500-1000 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியில் கலக்கி, 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.

கரும்பில் விதைக்கரணை நேர்த்தி

ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைக் கரணைகளை, 50 கிராம் கார்பென்டாசிம், ஒரு கிலோ யூரியா, 200 மில்லி மாலத்தியான், 100 லிட்டர் நீர் கலந்த கலவையில், சுமார் 15 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.

பின்பு, 4 பொட்டலம் அசோஸ் பயிரில்லம், 4 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா, 100 லிட்டர் நீர் கலந்த கலவையில், இந்தக் கரணைகளை 15 நிமிடம் ஊற வைத்து நட வேண்டும்.

இந்தக் கரைசலில் உள்ள கார்பென்டாசிம், நோய்களைத் தடுக்கப் பயன்படும். யூரியா முளைப்புத் திறனைக் கூட்டும்.

மாலத்தியான் பூச்சிக்கொல்லி, பூச்சிகளில் இருந்து கரணைகளைப் பாதுகாக்கும். வேர்கள் விரைவாக வளர உயிர் உரங்கள் உதவும். இப்படி, விதை நேர்த்தி செய்து நடுவதன் மூலம், கரும்பின் வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் பயிர்ப் பாதுகாப்புக்கு ஆகும் செலவைக் குறைக்கலாம்.

விதை நேர்த்தியின் போது கவனிக்க வேண்டியவை

இரசாயனப் பூசணம் மற்றும் பூச்சிக் கொல்லியில் விதைநேர்த்தி செய்தால், குறைந்தது 24 மணி நேரம் கழித்தே உயிர் எதிர்க் கொல்லிகள் மற்றும் உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

எந்தச் சூழலிலும், இரசாயனப் பூசணம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை, உயிர் எதிர்க் கொல்லிகள் மற்றும் உயிர் உரங்களுடன் கலந்து பயன்படுத்தக் கூடாது.

இத்தகைய மிகச் சிக்கனமான, எளிய தொழில் நுட்பமான விதை நேர்த்தி முறைகளைக் கடைப்பிடித்தால், பூச்சி மற்றும் நோய்களை வருமுன் தடுத்துக் கூடுதல் மகசூலைப் பெற்றுப் பயனடையலாம்.


விதை RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ், உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading