விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

வெங்காய onion 2

ன்றாடம் சமையலில் பயன்படும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

எகிப்தில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயம் உள்ளது. இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சரக சம்கிதா மருத்துவக் கட்டுரையில், வெங்காயத்தின் மருத்துவக் குணம் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பெரிய வெங்காயம் 80%, சின்ன வெங்காயம் 20% அளவில் பயிரிடப் படுகின்றன. ஆந்திரம், கர்நாடகம் மற்றும் ஒடிசாவில் சின்ன வெங்காயம் விளைகிறது.

தமிழகத்தில், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் விளைந்தாலும், பெரம்பலூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் அதிகப் பரப்பில் பயிரிடப் படுகிறது.

உற்பத்தியாகும் சின்ன வெங்காயத்தில் பெருமளவு விதைக்காகக் பயன்படுவதால், சமையலில் இதன் பங்கு குறைவாகவே உள்ளது. ஓர் ஏக்கர் நடவுக்கு 600 கிலோ வெங்காயம் தேவைப் படுவதால் சாகுபடிச் செலவும் கூடுகிறது.

இதனால், பெரும்பாலும் இதன் விலை அதிகமாகவே உள்ளது. எனவே, சின்ன வெங்காயத்தை விதை மூலம் சாகுபடி செய்தால் செலவு குறையும். ஓர் ஏக்கருக்குத் தேவையான ஒரு கிலோ விதைகளின் விலை ரூ.2,000-3,000 மட்டுமே.

நாற்றங்கால் தயாரிப்பு

ஓர் ஏக்கருக்குத் தேவையான வெங்காய நாற்றுகளை உற்பத்தி செய்ய, இரண்டு சென்ட் நிலம் தேவை. இதை 2-3 முறை உழுது புழுதியாக்கி, சென்ட்டுக்கு 50 கிலோ மண்புழு உரம் அல்லது 100 கிலோ தொழுவுரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட வேண்டும்.

தொழுவுரத்தை இட்டால் களைகள் நிறைய முளைக்கும் என்பதால், மண்புழு உரமே நல்லது. வேப்பம் புண்ணாக்கு, இலைப்பேனைக் கட்டுப்படுத்தும். பிறகு, 2.5 அடி அகலம், அரையடி உயரம் மற்றும் போதுமான நீளத்தில் மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்.

விதை நேர்த்தி மற்றும் விதைப்பு

ஓர் ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய, ஒரு கிலோ விதைகள் தேவை. ஒரு கிலோவில் 2.5 இலட்சம் விதைகள் இருக்கும். விதையின் முளைப்புத் திறன் மற்றும் நாற்றங்கால் பராமரிப்பைப் பொறுத்து நாற்றுகள் கிடைக்கும்.

ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் எடுத்து, ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து நேர்த்தி செய்து, அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

அதாவது, ஒரு சதுரடியில் ஒரு கிராம் விதைகள் வீதம் தூவ வேண்டும். பிறகு, இந்த விதைகளை மண்புழு உரம் அல்லது மணலைத் தூவி மூடி விட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும்.

விதைகள் 6-8 நாட்களில் முளைக்கும். விதைகள் முளைக்கும் வரை நாற்றங்கால் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். நாற்றுகள் முளைத்த பிறகு, மண்ணின் தன்மைக்கு ஏற்ப, 2-3 நாட்களுக்கு ஒருமுறை நீரைப் பாய்ச்சலாம்.

நாற்றங்காலில் களை முளைப்பைத் தடுக்க, விதைத்ததும், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி பென்டி மெத்தலின் வீதம் கலந்து தெளிக்கலாம்.

நாற்றுப் பாதுகாப்பு

இலைப்பேன் தாக்குதலில் இருந்து நாற்றுகளைப் பாதுகாக்க, 5% வேப்பங் கொட்டைக் கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி அசாடிராக்டின் வீதம் கலந்து தெளிக்கலாம்.

முக்கிய நோயான நாற்றழுகல், பித்தியம், பைட்டோப் தோரா, ரைசக்டோனியா, பியூசேரியம் போன்ற பூஞ்சைகளால் ஏற்படும். இவை நாற்றுகள் முளைப்பதற்கு முன் விதைகளை அழுகச் செய்யும்.

முளைத்த பின் நாற்றுகளின் கழுத்துப் பாகத்தை அழுகச் செய்து சேதப்படுத்தும். இந்நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு வீதம் கலந்து, வேர்கள் நனையும்படி ஊற்றலாம்.

நிலத் தயாரிப்பு

காய்களை நடுவதற்கு நிலத்தைத் தயாரிப்பதைப் போலவே, நாற்று நடவுக்கும் நிலத்தைத் தயார் செய்யலாம். நிலத்தை 3-4 முறை உழுது பார்களை அமைத்து வாய்க்கால் மூலம் பாசனம் செய்யலாம்.

அல்லது 3-4 அடி அகலம், 15 செ.மீ. உயரமுள்ள மேட்டுப் பாத்திகளை அமைத்து, சொட்டுநீர் முறையிலும் பாசனம் செய்யலாம். இதற்கு 16 மி.மீ. அளவுள்ள பக்கக் குழாய்களை, படுக்கைக்கு இரண்டு வீதம் அமைக்கலாம்.

முப்பது செ.மீ. இடைவெளியில் சொட்டுவான்களை அமைக்க வேண்டும். இவற்றின் நீர் வெளியேற்றும் திறன் மணிக்கு 4 லிட்டர் வீதம் இருக்க வேண்டும்.
நுண் தெளிப்புப் பாசனத்துக்கு 20 மி.மீ. தெளிப்புக் கருவியை 6 மீட்டர் இடைவெளியில் அமைக்கலாம். இதன் நீர் வெளியேற்றும் திறன், மணிக்கு 135 லிட்டர் வீதம் இருக்க வேண்டும்.

நடவு

35-45 நாள் நாற்றுகளை நடலாம். இந்தச் சமயத்தில் 15-20 செ.மீ. உயரம் மற்றும் 3-4 தாள்களுடன் நாற்றுகள் இருக்கும். தடித்த நாற்றுகளை நட வேண்டும்.

வயது அதிகமான நாற்றுகளை நட்டால், தாள்கள் தடித்துப் புதிய வளர்ச்சி ஏற்படக் காலத் தாமதமாகும். வயது குறைந்த நாற்றுகளை நட்டால் சரியாக வளராமல் பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும்.

களைக் கட்டுப்பாடு

நடுவதற்கு முன், ஏக்கருக்கு 800 மில்லி புளுகுளோரலின் வீதம் நிலத்தில் தெளிக்கலாம். அல்லது நடவு முடிந்த மூன்று நாட்களில், ஏக்கருக்கு ஒரு லிட்டர் பென்டி மெத்தலின் அல்லது 250 மில்லி ஆக்ஸி புளுரோயென் களைக் கொல்லியை மணலில் கலந்து, நிலம் ஈரப்பதமாக இருக்கையில் தூவ வேண்டும். பிறகு, 1-2 முறை கைக்களை எடுக்கலாம்.

உரமிடல்

கடைசி உழவின் போது ஏக்கருக்கு நன்கு மட்கிய தொழுவுரம் 10 டன் அல்லது 5 டன் மண்புழு உரம் அல்லது நன்கு மட்கிய கோழியெருவை இட வேண்டும்.

பார்களை அமைக்கும் போது ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 சூப்பர் பாஸ்பேட் மற்றும் 20 கிலோ பொட்டாசை இட வேண்டும்.

மேலுரமாக, முப்பது நாளில் 22 கிலோ யூரியா அல்லது 58 கிலோ அம்மோனியம் சல்பேட்டை இடலாம்.

சொட்டுநீர்ப் பாசனம் வழியாக உரமளிக்க, ஏக்கருக்கு 112 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை, பார்களை அமைக்கும் போது அடியுரமாக இட வேண்டும். அடுத்து, நீரில் கரையும் உரங்களை மூன்று நாட்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்.

இதற்கு, ஏக்கருக்கு 19:19:19 உரம் 13 கிலோ, 12:61:0 உரம் 6 கிலோ, 13:0:45 உரம் 6 கிலோ 0:0:50 உரம் 14 கிலோ மற்றும் யூரியா 44 கிலோ தேவைப்படும்.

நட்டு 40 மற்றும் 50 நாளில், காய்கறி நுண்ணுரக் கலவையை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்து தெளித்தால், காய்களின் எடையும் நிறமும் கூடும்.

விதைமுறை சாகுபடி இரகங்கள்

கோ. 5: காய்கள் இளஞ் சிவப்பாக இருக்கும். நட்டு 90 நாட்களில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும். மார்ச் முதல் ஜுலை வரையில் காய்கள் உற்பத்திக்கும், நவம்பர் முதல் ஜனவரி வரை விதை உற்பத்திக்கும் பயிரிடலாம். ஏக்கருக்கு 100-120 கிலோ விதைகள் கிடைக்கும்.

கோ. 6: காய்கள் இளஞ் சிவப்பாக இருக்கும். நட்டு 90 நாட்களில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 7.5 டன் மகசூல் கிடைக்கும். ஒரு செடியில் 5-7 காய்கள் இருக்கும். காய்கள் பெரிதாக இருக்கும்.

மே முதல் செப்டம்பர் வரை காய்கள் உற்பத்திக்கும், டிசம்பர் முதல் ஏப்ரல் வரை விதை உற்பத்திக்கும் பயிரிடலாம். ஏக்கருக்கு 120 கிலோ விதைகள் கிடைக்கும்.

அர்க்கா உஜ்வால்

காய்கள் சிவப்பாக இருக்கும். ஏற்றுமதிக்கு உகந்தது. ஒரு செடிக்கு 3-5 காய்கள் இருக்கும். நட்டு 85 நாட்களில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 8-10 டன் காய்கள் கிடைக்கும். இதைப்போல, ஒரியா, ஸ்ரீகா இரகங்களையும் பயிரிடலாம்.

பயிர்ப் பாதுகாப்பு: நோய்கள்

ஊதாக்கருகல் நோய்: இது, அல்டர்னேரியா போரி என்னும் பூஞ்சையால் ஏற்படும். வெப்பநிலை குறைந்தும், காற்றின் ஈரப்பதம் மிகுந்தும் இருக்கும் போது, இப்பூஞ்சை வேகமாகப் பரவும். முதிர்ந்த தாள்களில் தோன்றி இளம் தாள்களுக்கும் பரவும்.

இதனால், சிறிய கண் வடிவ வெள்ளைப் புள்ளிகள் தோன்றி நாளடைவில் ஊதா நிறமாக மாறும். இதைச் சுற்றி மஞ்சள் வளையங்களும் இருக்கும். நாளடைவில் தாள்கள் முழுவதும் மஞ்சள் அல்லது பழுப்பாக மாறி மடிந்து விடும். காய்கள் சிறுத்து மகசூல் குறையும். இந்நோயால் பாதித்த காய்களைச் சேமித்து வைத்தால் அழுகி விடும்.

கட்டுப்பாடு: சரியான இடைவெளி மற்றும் களைக் கட்டுப்பாடு மூலம் நிலத்தில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தி, தாள்களின் ஈரத் தன்மையைக் குறைக்கலாம். தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. பயிர்ச் சுழற்சி முறை அவசியம்.

ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி டிரைசைக் ளோசோல் அல்லது ஹெக்சோ கோனசோல் வீதம் கலந்து தெளிக்கலாம். இலைப்பேன் தாக்கிய தாள்களை இப்பூஞ்சை எளிதாகத் தாக்குவதால், இலைப்பேனைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அடிச்சாம்பல் நோய்: இது, பெரனோஸ்போரா டெஸ்ட்ரக்டர் என்னும் பூஞ்சையால் ஏற்படும். வெப்பநிலை குறைந்தும் காற்றின் ஈரப்பதம் மிகுந்தும் இருக்கும் போது, இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதனால் பாதிக்கப்படும் வெங்காயத் தாள்களில் வெளிர்நிறப் புள்ளிகள் தோன்றி, பிறகு பழுப்பாக மாறும். செடிகளின் வளர்ச்சியும் குன்றும். காய்கள் சிறுத்து, மிக மென்மையாக இருக்கும்.

கட்டுப்பாடு: தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. பயிர்ச் சுழற்சி முறை அவசியம். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேங்கோசெப் வீதம் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கலாம்.

திருகல் நோய்: இது, கொலிட்டோ டிரைக்கம் ஜிலோஸ் போரியாய்டெஸ் என்னும் பூஞ்சையால் தோன்றும். தாக்குதலுக்கு உள்ளான செடிகளின் தாள்களில், வெளிர் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றித் தாள்கள் முழுவதும் பரவி விடும்.

பிறகு, தாள்கள் கறுப்பு நிறமாக மாறிச் சுருங்கித் தொங்கி உதிர்ந்து விடும். காயின் கழுத்துப் பாகம் நீண்டும், அடிப்பாகம் சிறுத்தும் காணப்படும். நோய் முற்றிய நிலையில், பயிர் மடிந்து விடும்.

இது, மண் மூலம் பரவும். காற்றில் அதிக ஈரப்பதம் மற்றும் மழைக்காலத்தில் நிலத்தில் நீர் தேங்கி யிருந்தால் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெங்காயத் தோட்டத்தில் இந்நோய், திட்டுத் திட்டாக அல்லது முழுவதுமாகக் காணப்படும்.

கட்டுப்பாடு: பயிரின் எஞ்சிய பாகங்களில் இப்பூஞ்சை தங்கி யிருப்பதால் நிலத்தைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். ஸினெப் பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் கலந்து நிலத்தில் ஊற்றலாம். மாங்கோசெப் பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம்.

காயழுகல் நோய்: இது, பியூசேரியம் ஆக்ஸிபோரம் சீப்பே என்னும் பூஞ்சையால் ஏற்படும். இந்தப் பூஞ்சை நிலத்தில் நீண்ட நாட்கள் வாழும். நோய்த் தாக்குதலுக்கு உள்ளான செடிகள் மஞ்சள் நிறமாகி, பிறகு, பழுப்பு நிறமாக மாறும்.

மேலிருந்து கீழாக நிறம் மாறும். வேர்கள் நைந்து விட, காய்கள் அடியிலிருந்து அழுகத் தொடங்கும். தீவிரத் தாக்குதலுக்கு உள்ளான செடிகளை நிலத்தில் இருந்து எளிதாகப் பிடுங்கி எடுக்க முடியும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது இப்பூஞ்சை வேகமாகப் பரவும்.

கட்டுப்பாடு: நிலத்தில் நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். கோடையில் ஆழமாக உழுவதன் மூலமும், சோளத்தை ஓரப்பயிராகப் பயிரிடுவதன் மூலமும், பூஞ்சையின் தாக்குதலைத் தவிர்க்க முடியும்.

டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோ மோனாஸ் புளூரசன்ஸ் போன்ற உயிரிப் பொருள்களை, ஒரு கிலோ விதைக் காய்க்கு முறையே 5 கிராம் வீதம் அல்லது கார்பென்டாசிம் பூசணக் கொல்லியை ஒரு கிராம் வீதம் எடுத்து, இதில் காய்களை நேர்த்தி செய்து நடுவதன் மூலம், காயழுகல் நோயைத் தவிர்க்கலாம்.

காயழுகல் ஏற்பட்ட செடிகளைப் பிடுங்கி அகற்றி விட்டு, அந்த இடத்திலும், அதைச் சுற்றியுள்ள செடிகளுக்கும் கார்பென்டாசிம் பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் கலந்து நிலத்தில் ஊற்றலாம். பிறகு, கார்பென்டாசிம் பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து நிலம் முழுதுமுள்ள பயிர்கள் நன்கு படும்படி தெளிக்கலாம்.

சாம்பல் நோய்: லெவிலுலா டாரிகா என்னும் பூஞ்சை மூலம் இந்நோய் ஏற்படும். முதிர்ந்த இலைகளில் வெண் படிமங்கள் படர்ந்து இருக்கும். நாளடைவில், பாதிக்கப்படும் தாள்கள் பச்சையத்தை இழந்து பழுப்பு நிறமாக மாறும். இந்தப் பூஞ்சை, பயிரின் எஞ்சிய பாகத்தில் தங்கி அடுத்த பருவம் வரை வாழும்.

கட்டுப்பாடு: பயிரின் எஞ்சிய பாகங்கள் நிலத்தில் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். நனையும் கந்தகம் என்னும் பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம்.

இளஞ்சிவப்பு வேர்: போமா டெரஸ்ட்ரிஸ் என்னும் பூஞ்சை மூலம் இந்நோய் ஏற்படும். இப்பூஞ்சை மண்ணில் வாழும்; வேரைத் தாக்கும். ஆனால், வெங்காயக் குமிழத்தைத் தாக்காது. வறட்சி, பனி, சத்துக்குறை, பூச்சி மற்றும் பிற நோய்களின் தாக்குதல் இருக்கும் போது, இப்பூஞ்சை எளிதாகப் பயிரைத் தாக்கும்.

அதிகப் பாதிப்புக்கு உள்ளான செடிகள் வளராமல் இருக்கும். தாள்கள் மேலிருந்து கீழாகக் கருகும். வேர்கள் இளஞ் சிவப்பு நிறமாக மாறி யிருக்கும். நீரைப் பாய்ச்சும் போது, இப்பூஞ்சை நிலத்தில் வேகமாகப் பரவும். வேர் பாதிக்கப் படுவதால், செடிகளுக்கு நீர் செல்வது குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும்.

கட்டுப்பாடு: ஒரே நிலத்தில் தொடர்ந்து வெங்காயத்தைப் பயிரிடக் கூடாது. முறையான உர நிர்வாகமும், பூச்சி, நோய் நிர்வாகமும் கையாளப்பட வேண்டும். குளோரோ பிக்ரின் மூலம் நிலத்தில் புகை மூட்டம் போடலாம்.

புல்லுருவி (கஸ்கூட்டா): வெங்காய நிலத்தில் மஞ்சள் நிற நூலைப் போன்ற கொடி, வெங்காயப் பயிரின் மீது படர்ந்து அதன் வளர்ச்சியைத் தடுத்து, 50-75% மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

இதன் விதைகள் வயலில் விழுந்து முளைத்ததும் அவற்றின் மெல்லிய வேர்கள், வெங்காயத் தாள்களின் மீது பற்றித் தமக்குத் தேவையான உணவை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.

இந்தப் புல்லுருவியின் தாக்குதலுக்கு உள்ளான செடிகள் வளராமல், நிறம் வெளிரி, இறுதியில் மடிந்து விடும். கஸ்கூட்டா விதைகள் மற்றும் அதன் ஒடிந்த பாகங்கள் கூட நிலத்தில் விழுந்து முளைத்து விடும்.

கட்டுப்பாடு: கஸ்கூட்டாவை முற்றிலுமாகச் சேகரித்து அழித்து விட வேண்டும். கஸ்கூட்டாவுக்கு உணவல்லாத பயிர்களைச் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். தரமான வெங்காய விதைகளைத் தேர்வு செய்து நட வேண்டும்.

பூச்சிகள்

இலைப்பேன்: இது, புதிதாகத் தோன்றும் வெங்காயத் தாள்களில் சாற்றை உறிஞ்சிச் சேதப்படுத்தும். இதனால், 30-100% இழப்பு ஏற்படும். இளம்பேன் வெண்மை அல்லது இளமஞ்சள் நிறத்தில் 0.5-12 மி.மீ. நீளத்திலும், வளர்ந்த பேன் 2 மி.மீ. நீளத்திலும் இருக்கும். மஞ்சள் அல்லது பழுப்பு இறக்கையுடன் இருக்கும். தாள்கள் பிரியுமிடத்தில் நிறைய இருக்கும்.

தாள்களில் சாற்றை உறிஞ்சுவதால் பச்சையம் இன்றி, வெண் புள்ளிகள் தோன்றி இலைகள் வெளுத்து விடும். ஒளிச்சேர்க்கை தடைபடுவதால் பயிரின் வளர்ச்சியும் குன்றி விடும். தாக்குதல் அதிகமானால், தாள்கள் காய்ந்து கருகியதைப் போலிருக்கும்.

கட்டுப்பாடு: தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. பயிர்ச் சுழற்சி முறை அவசியம். நிலத்தில் களைகள் இருக்கக் கூடாது. ஏக்கருக்கு 5 வீதம் மஞ்சள் ஒட்டும் பொறிகளை வைக்க வேண்டும்.

வரப்பு ஓரங்களில் கவர்ச்சிப் பயிராக மக்காச் சோளத்தைப் பயிரிடலாம். பத்து லிட்டர் நீருக்கு 100 கிராம் பிவேரியா பேசியானா வீதம் கலந்து தெளிக்கலாம்.

வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லியை ஏக்கருக்கு 400 மில்லி வீதம் எடுத்து ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கலாம். பத்து லிட்டர் நீருக்கு 20 மில்லி புரோபினோபாஸ் அல்லது 20 மில்லி டைமெத்தோ யேட் அல்லது 10 கிராம் அசிப்பேட் வீதம் கலந்து தெளிக்கலாம்.

புகையிலைப்புழு: இளம்புழு பச்சையாகவும், வளர்ந்த புழு பழுப்பாகவும் இருக்கும். தாள்களைச் சுரண்டிச் சேதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி, 5 இனக் கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைக்கலாம். பத்து லிட்டர் நீருக்கு 20 மில்லி குளோரி பைரிபாஸ் 20 இ.சி. அல்லது 3 மில்லி புளுபென் டையமைடு 480 எஸ்.சி. வீதம் கலந்து தெளிக்கலாம்.


வெங்காய kathiravan e1630179750738

ஜெ.கதிரவன், தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், காரைக்கால்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading