கத்தரியில் நல்ல மகசூலுக்கான வழிமுறைகள்!

கத்தரி brinjal 2

மிழகத்தில் நீலகிரியைத் தவிர மற்ற மாவட்டங்களில் கத்தரி பயிரிடப் படுகிறது. கத்தரிக்காய் சத்துக் குறைவான காய் என்னும் தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆயுர்வேத முறைப்படி, கத்தரி நல்ல மூலிகையாகும். குறிப்பாக, நீரிழிவு உள்ளோர்க்கு மிகவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.

இரகங்கள்

கோ.1, கோ.2, கோ.பி.எச்.1, எம்.டி.யு.1, பி.கே.எம்.1, பி.எல்.ஆர்.1, கே.கே.எம்.1, ப.பி.ஐ.1, அண்ணாமலை, பூசா ஊதா நீளம், பூசா கிராந்தி, அர்கால், அர்காரீ, அர்கா நீல்காந்த், அர்கா குசுமகார், அர்கா நிதி, அர்காகேல், அர்கா நவனீத், அர்காகேசவ், அர்கா சிரிஸ், அர்கா ஆனந்த்.

வீரிய ஒட்டு இரகங்கள்

கோ.பி.எச்.1, கோ.பி.எச்.2, பூசா அன்மால், அர்கா நவனீத், பூசா ஹைபிரிட் 6, உறிசார் சியாமளா, எம்.எச்.பி. 1, எம்.எச்.பி. 9, எம்.எச்.பி. 20, அஜாட் ஹைபிரிட்.

தட்ப வெப்பம், மண்வளம்

கத்தரி கோடைப் பயிராகும். உறைபனி, செடிகளைக் கொன்று விடும். நீண்ட நாட்களுக்குக் குளிர் தொடர்ந்து இருந்தாலும் செடிகள் பாதிக்கப்படும். நெடுவயது இரகங்கள், மிதமான உறை பனியைத் தாங்கி நிற்கும்.

செடிகள் செழித்து வளர்ந்து காய்ப்பதற்கு ஏற்ற வெப்பநிலை, 25-30 டிகிரி செல்சியஸ் ஆகும். இது, 15 டிகிரி செல்சியசை விடக் குறைந்தால், கத்தரிச் செடியின் வளர்ச்சி, காய்ப்புத் திறன், தரம் ஆகியன பாதிக்கப்படும்.

பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் மழை அதிகமாகப் பெய்தால், மகசூல் பாதிக்கும். ஆழமான, வடிகால் வசதியுள்ள வண்டல் அல்லது களி கலந்த இருமண் நிலம் கத்தரியைப் பயிரிட மிகவும் உகந்தவை. நிலத்தின் அமில காரத் தன்மை 5.5-6.0 இருந்தால், இதன் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகமாக இருக்கும்.

இரகங்கள்

தமிழகத்தில் நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப, பயிரிடப்படும் இரகங்கள் மாவட்டந் தோறும் மாறுபடும். எனவே, தேவை அடிப்படையில் இரகத்தைத் தேர்வு செய்வது அவசியம். தமிழகத்தில் விரும்பி ஏற்கப்படும் காய்களின் நிறம் மற்றும் வடிவ விவரங்கள்:

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில், வெளிர் பச்சை, வெள்ளை, வெளிர் ஊதா நிற உருண்டை மற்றும் நீள் உருண்டைக் காய்கள்.

கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில், முள்ளற்ற ஊதா வரிக்காய்.

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், வெள்ளை உருண்டை, வெள்ளை முட்டை வடிவக் காய்கள்.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில், ஊதா உருண்டை, ஊதா நீள உருண்டைக் காய்கள்.

வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டகளில், ஊதா வரிக் காய்கள்.

உயர் விளைச்சல் இரகங்கள்

கோ.1: கோவை வேளாண் பல்கலைக் கழகத் தோட்டக்கலைக் கல்லூரியில் உருவாக்கப் பட்டது. செடிகள் புதரைப் போல அடர்ந்து இருக்கும். காய்கள், வெளிர் பச்சை நிறத்தில் முட்டை வடிவில் இருக்கும்.

எம்.டி.யூ.1: கல்லம்பட்டி என்னும் நாட்டு இரகத்தில் இருந்து, மதுரை வேளாண்மைக் கல்லூரியில் உருவாக்கப் பட்டது. காய்கள் உருண்டையாக, 200-250 கிராம் எடையில், பளப்பளப்பான ஊதா நிறத்தில் இருக்கும். காய்கள் முற்றத் தொடங்கியதும் வெளிர் ஊதா நிறத்தில் இருக்கும். இதுவே, பறிப்பதற்கு ஏற்ற காலமாகும். எக்டருக்கு 30 டன் மகசூலைத் தரும்.

அண்ணாமலை: அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தோட்டக்கலைக் கல்லூரியில் உருவாக்கப் பட்டது. அசுவினித் தாக்குதலைத் தாங்கி வளரும். காய்கள் நீள் உருண்டையாக, கரு ஊதா நிறத்தில், புல்லி வட்டத்தின் மேல் சில முட்களுடன் இருக்கும். எக்டருக்கு 20-22 டன் மகசூலைத் தரும்.

கோ.2: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் தோட்டக்கலைக் கல்லூரியில் உருவாக்கப் பட்டது. நெகமம் என்னும் ஊரிலுள்ள கத்தரியில் இருந்து உருவாக்கப்பட்ட இரகம். செடிகள் அடர்ந்து நெருக்கமான கிளைகளுடன் இருக்கும். காய்கள் சிறிது நீள் உருண்டையாக, ஊதா வரிகளுடன் பளபளப்பாக இருக்கும். எக்டருக்கு 30-35 டன் மகசூலைத் தரும்.

பி.கே.எம்.1: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில், புழுதிக் கத்தரி என்னும் நாட்டு இரகத்தில் இருந்து உருவாக்கப் பட்டது. மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மானாவாரியாகப் பயிரிட ஏற்றது. காய்கள் சிறியளவில், சற்று நீள் உருண்டையாகப் பச்சை வரிகளுடன் இருக்கும்.

பூசா ஊதா நீளம்: புதுதில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப் பட்டது. காய்கள் 25-30 செ.மீ. நீளத்தில், பளபளப்பான வெளிர் நிறத்தில் இருக்கும். எக்டருக்கு 25-37 டன் மகசூலைத் தரும்.

பூசா ஊதா உருண்டை: புதுதில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப் பட்டது. செடிகள் நன்கு உயரமாக வளரும். தண்டுப்பகுதி பருத்துப் பச்சை கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். காய்கள் உருண்டையாக, ஊதா நிறத்தில் இருக்கும். காயின் எடை 130-140 கிராம் இருக்கும்.

பூசா ஊதாக் கொத்து: கொத்துக் கொத்தாகக் காய்க்கும் இந்த இரகம், புது தில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப் பட்டது.

அர்கா ஷீல்: பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப் பட்டது. கர்நாடகக் குடகுப் பகுதியிலுள்ள ஒரு நாட்டு இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது. காய்கள் நடுத்தர நீளத்தில், அடர் ஊதா நிறத்தில், குறைந்த விதைகளுடன் இருக்கும். 120 நாட்களில் 39 டன் மகசூலைத் தரும்.

அர்கா ஷீரிஷ்: பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில், கர்நாடகாவின் இரங்கேரி இரகக் கத்தரியில் இருந்து உருவாக்கப் பட்டது. இதன் வயது 115 நாட்கள். காய்கள் மிக நீளமாக, வெளிர் பச்சையாக இருக்கும். எக்டருக்கு 45-47 டன் மகசூலைத் தரும்.

அர்கா குசமகார்: கர்நாடகத்தில் ஒரு நாட்டு இரகத்தில் இருந்து உருவாக்கப் பட்டது. இதன் வயது 120 நாட்கள். காய்கள் நடுத்தர நீளத்தில் விரலைப் போல வெளிர் பச்சை நிறத்தில் கொத்துக் கொத்தாக இருக்கும். கொத்துக்கு 5-7 காய்கள் இருக்கும். எக்டருக்கு 45 டன் மகசூலைத் தரும்.

பந்த் சாம்ராட்: உ.பி.யின் பந்த் நகர் வேளாண் பல்கலைக் கழகத்தில், ஒரு நாட்டு இரகத்தின் மூலம் உருவாக்கப் பட்டது. ஃபோமோப்சிஸ் வாடல் நோயைத் தாங்கி வளரும்.

பந்த் ரீட்டுராஜ்: பந்த் நகர் வேளாண் பல்கலைக் கழகத்தில், டி3 என்னும் இரகத்தையும், பூசா ஊதாக் கொத்து இரகத்தையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. காய்கள் உருண்டையாக, ஊதா நிறத்தில் இருக்கும். எக்டருக்கு 40 டன் மகசூலைத் தரும்.

ஆஸாத் கிரந்தி: உ.பி.யின், கல்யாண்பூரில் உள்ள ஆஸாத் வேளாண் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. காய்கள் நீள் உருண்டையாக, 15-20 செ.மீ. நீளத்தில் கரு ஊதா நிறத்தில் இருக்கும்.

ஜமுனி கோவா: லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. காய்கள் உருண்டு, பளப்பளப்பாக இருக்கும்.

கே.டி.4: இமாச்சலில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் கட்ரயின் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப் பட்டது. பாக்டீரிய வாடல் நோயைத் தாங்கி வளரும். ஒரு கொத்தில் 3-5 காய்கள் இருக்கும். எக்டருக்கு 37 டன் மகசூலைத் தரும்.

பூசா கிரந்தி: இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப் பட்டது. காய்கள் 15-20 செ.மீ. நீளத்தில், கரு ஊதா நிறத்தில், பசுமையான புல்லி வட்டம் மற்றும் குறைவான விதையுடன் இருக்கும். எக்டருக்கு 27 டன் மகசூலைத் தரும்.

அர்கா நீல்காந்த்: பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப் பட்டது. செடிகள் 90-100 செ.மீ. உயரம் வளரும். காய்கள் 12 செ.மீ. நீளத்தில், 8.5 செ.மீ. சுற்றளவில், நீல நிறத்தில் பளபளப்புடன், மெல்லிய விதைகள் மற்றும் அதிகச் சதையுடன் இருக்கும். புல்லி வட்டம் பசுமையாக இருக்கும். காய்களின் எடை 40 கிராம் இருக்கும்.

கொத்தாகக் காய்க்கும். குருத்து இலைகள் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். தண்டுப்பகுதி ஊதா கலந்த பசுமையுடன் இருக்கும். பாக்டீரிய வாடல் நோயைத் தாங்கி வளரும். 150 நாட்களில் எக்டருக்கு 40 டன் மகசூலைத் தரும்.

அர்கா நிதி: பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப் பட்டது. செடிகள் 90 செ.மீ. உயரத்தில் பல கிளைகளுடன் இருக்கும். காய்கள் 20 செ.மீ. நீளத்தில், 9 செ.மீ. சுற்றளவில், கரு ஊதா நிறத்தில் இருக்கும். காய்கள் கசப்பாக இருக்காது.

மென்மையான சதைப்பற்று மற்றும் மெதுவாக முதிரும் விதைகளுடன் இருக்கும். காயின் எடை 40-45 கிராம் இருக்கும். பாக்டீரிய வாடல் நோயைத் தாங்கி வளரும். 150 நாட்களில் எக்டருக்கு 48 டன் மகசூலைத் தரும்.

அர்கா கேஷல்: பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப் பட்டது. செடிகள் 70-75 செ.மீ. உயரத்தில் பல கிளைகளுடன் இருக்கும். காய்கள் 50 கிராம் எடையில், செந்நீல நிறத்தில் இருக்கும். புல்லி வட்டம் பசுமையாக இருக்கும். பாக்டீரிய வாடல் நோயைத் தாங்கி வளரும். 150 நாட்களில் எக்டருக்கு 45 டன் வரை காய்க்கும்.

பஞ்சாப் பர்சாதி: லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. செடிகள் 65-70 செ.மீ. உயரம் வளரும். காய்கள் 11.5 செ.மீ. நீளம், 3.8 செ.மீ. சுற்றளவில் நீள் உருண்டையாக, செந்நீல நிறத்தில் இருக்கும். எக்டருக்கு 25-30 டன் காய்களைக் காய்க்கும்.

பஞ்சாப் நீலம்: லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. காய்கள் நீண்டு நீல நிறத்தில் இருக்கும். எக்டருக்கு 30 டன் வரை காய்க்கும்.

ஏபி எயு குலாபி: ஐதராபாத்தில் உள்ள ஆந்திர வேளாண் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. காய்கள் நீண்டு, வெளிர் ஊதா நிறத்தில் இருக்கும். 160-165 நாட்களில் எக்டருக்கு 23-25 டன் மகசூலைத் தரும்.

ஏபி எயு சியாமளா: ஐதராபாத்தில் உள்ள ஆந்திர வேளாண் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. வயது 135-150 நாட்கள். காய்கள் சிறிதாக, உருண்டையாக, அடர் ஊதா நிறத்தில் இருக்கும். எக்டருக்கு 15-16 டன் மகசூலைத் தரும்.

ஏபி எயு பாக்யவதி: ஐதராபாத்தில் உள்ள ஆந்திர வேளாண் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. காய்கள் நீள் உருண்டையாக, அடர் ஊதா நிறத்தில் இருக்கும். வயது 150 நாட்கள். எக்டருக்கு 23-30 டன் மகசூலைத் தரும்.

வீரிய ஒட்டு இரகங்கள்

பூசா அன்மோல்: இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், பூசா ஊதா என்னும் இரகத்தின் மூலம் உருவாக்கப் பட்டது. பூசா ஊதா இரகத்தைக் காட்டிலும் 80% அளவில் கூடுதல் மகசூலைத் தரும்.

அர்கா நவநீத்: பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப் பட்டது. ஐ.ஐ.எச்.ஆர்.221 என்னும் இரகத்தில் கரு ஒட்டுச் செய்யப் பட்டது. காய்கள் உருண்டையாக, சிறிது நீண்டு, 400-500 கிராம் எடையில், கரு ஊதா நிறத்தில் இருக்கும். எக்டருக்கு 65-75 டன் மகசூலைத் தரும்.

எம்.எச்.பி.1: மராட்டிய ஹைபிரிட் விதை நிறுவனத்தில் உருவாக்கப் பட்டது. காய்கள் நீண்டு கரு ஊதா நிறத்தில் இருக்கும். இலையின் மேற்பரப்பு மற்றும் புல்லி வட்டத்தில் ஒன்றிரண்டு முட்கள் இருக்கும். எக்டருக்கு 50-60 டன் மகசூலைத் தரும். மத்திய இந்தியா மற்றும் வட மாநிலங்களில் இந்தக் காய்க்கு அதிக வரவேற்பு உண்டு.

எம்.எச்.பி.9: மஹிகோ நிறுவனத்தில் உருவாக்கப் பட்டது. காய்கள் மெலிந்து, நீண்டு, வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். எக்டருக்கு 25-30 டன் மகசூலைத் தரும். கர்நாடக மக்கள் இந்தக் காயை விரும்பி வாங்குகின்றனர்.

மண்வளம், பருவம்

நல்ல வடிகால் வசதி மற்றும் கார அமில அளவு 6.5-7.5 உள்ள இருமண் நிலம் கத்தரி சாகுபடிக்கு ஏற்றது. காற்றின் வெப்பநிலை 25-35 டிகிரி செல்சியஸ் இருக்கும் போது நன்கு வளரும்.

டிசம்பர்-ஜனவரி மற்றும் மே-ஜுன் காலத்தில் பயிரிடலாம். சாதா இரகங்கள் எனில், எக்டருக்கு 400 கிராம் விதைகள், வீரிய ஒட்டு இரகங்கள் எனில், எக்டருக்கு 180 கிராம் விதைகள் தேவைப்படும்.

நாற்றங்கால் தயாரிப்பு

நாற்றங்காலை அமைக்க 4 சென்ட் நிலம் தேவை. இதை நன்கு கொத்தி மட்கிய தொழுவுரம் 160 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 150 கிலோ இட்டு, ஒரு மீட்டர் அகலம், தேவையான அளவு நீளத்தில், 10-15 செ.மீ. உயரத்தில் மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்.

பூசண நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த, விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோ மோனாஸ் புளூரோசன்ஸ் அல்லது 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

பிறகு, விதைப்பதற்கு 30 நிமிடத்துக்கு முன் 400 கிராம் விதைக்கு 40 கிராம் அசோஸ் பயிரில்லம் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்த வேண்டும்.

பிறகு, மேட்டுப் பாத்திகளின் குறுக்கே 10 செ.மீ. இடைவெளியில் கோடுகளைக் கிழித்து, விதைகளை ஒரே சீராக விதைத்து மேல் மண்ணால் மூடிவிட வேண்டும்.

அதன் பிறகு, பாத்திகளில் வைக்கோலைப் போர்த்தி, பாத்திகள் நன்கு நனையும் வகையில், பூவாளி மூலம் நீரைத் தெளிக்க வேண்டும். விதைத்த 5-7 நாட்களில் விதைகள் முளைத்ததும் வைக்கோலை நீக்கிவிட வேண்டும்.

ஒரு சத போர்டோ கலவை அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு வீதம் கலந்து பாத்திகளை நனைப்பதன் மூலம் நாற்றழுகல் மற்றும் வாடல் நோயைக் கட்டுப் படுத்தலாம்.

குழித்தட்டு நாற்றங்கால் முறையில், குறைந்த விதைகளைக் கொண்டு தரமான நாற்றுகளை உற்பத்தி செய்து மகசூலைப் பெருக்கலாம்.

நிலம் தயாரித்தல்

கடைசி உழவின் போது, மட்கிய தொழுவுரம் எக்டருக்கு 25 டன் வீதம் இட வேண்டும். பார்களை 60 செ.மீ. இடைவெளியில் அமைக்க வேண்டும். தேவையான அடியுரத்தை இட்ட பிறகு, எக்டருக்கு ஒரு லிட்டர் புளுகுளோரலின் வீதம் எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து தெளித்துப் பாசனம் செய்ய வேண்டும்.

பிறகு, 30-35 நாள் நாற்றுகளை 60 செ.மீ. இடைவெளியில் பார்களின் பக்கவாட்டில் நட வேண்டும்.

உரம், பாசனம்

அடியுரமாக எக்டருக்கு 25 டன் தொழுவுரத்தை இட வேண்டும். மேலும், 50:50:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து உரத்தையும், 2 கிலோ அசோஸ் பயிரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவையும் அடியுரமாக இட வேண்டும்.

நட்டு 30 நாட்களில் 50 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். நடவின் போதும், நட்ட மூன்றாம் நாள் உயிர் நீரும், பிறகு வாரம் ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும்.

பின்செய் நேர்த்தி

களைகளை நீக்கி விட்டு மேலுரத்தை இட்டு மண் அணைத்துப் பாசனம் செய்ய வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 35 மி.கி. போராக்ஸ் மற்றும் ஒரு மில்லி டிரை கான்டனால் பயிர் வினை ஊக்கி வீதம் எடுத்து 500 லிட்டர் நீரில் கலந்து, நட்ட 15 நாட்கள் கழித்தும் அடுத்து ஒருமுறையும் தெளித்தால் மகசூல் கூடும்.

பயிர்ப் பாதுகாப்பு

வெள்ளை ஈக்கள்: மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை வைத்து, தாய்ப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி டைகுளோர்வாஸ் அல்லது 2 மில்லி டிரையா சோபாஸ் 40 இசி, அல்லது 2 மில்லி மீத்தைல் டெமட்டான் 25 இசி வீதம் கலந்து, ஒட்டும் திரவமும் சேர்த்துத் தெளித்து வெள்ளை ஈக்களைக் கட்டுப் படுத்தலாம்.

நூற்புழுக்கள்: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். நாற்றங்காலில் விதைகளை விதைக்கும் போது, சதுர மீட்டருக்கு 10 கிராம் கார்போ பியூரான் 3 ஜி குருணை வீதம் இடலாம். இதை நடவு நிலத்தில் நட்ட ஒரு வாரம் கழித்து எக்டருக்கு ஒரு கிலோ வீதம் இட்டு நூற் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம்.

தண்டுப்புழு, காய்ப்புழு: பாதிக்கப்பட்ட நுனித்தண்டு மற்றும் காய்களை முதலில் அகற்ற வேண்டும். பிறகு, நட்ட ஒரு மாதம் கழித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பரில் 5% நனையும் தூள்,

அல்லது 2 கிராம் 50% நனையும் கந்தகம் அல்லது 2 மில்லி குயினால்பாஸ் 25 இ.சி. அல்லது 3% வேப்பெண்ணெய்க் கரைசல் அல்லது 5% வேப்பங் கொட்டைக் கரைசலைத் தெளித்து, தண்டுப்புழு மற்றும் காய்ப் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம்.

நாற்று வாடல் நோய்: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் வீதம் எடுத்து, மட்கிய 50 கிலோ தொழு உரத்தில் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

நாற்றங்காலில் நீர்த் தேங்கக் கூடாது. ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரரைடு வீதம் கலந்து, நாற்றங்காலில் சதுர மீட்டருக்கு 4 லிட்டர் வீதம், செடிகளின் வேர்கள் நனையும்படி ஊற்ற வேண்டும்.

இலைப்புள்ளி நோய்: இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மீத்தைல் டெமட்டான் 24 இ.சி. அல்லது 2 மில்லி டைமீத்தோயேட் 30 இ.சி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

சிற்றிலை நோய்: நோயுற்ற செடிகளை வேருடன் பிடுங்கி எரித்து விட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டைமீத்தோயேட் அல்லது மீத்தைல் டெமட்டான் வீதம் கலந்து தெளித்தால், இந்நோயைப் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம்.

யோமோப்சிஸ் வேரழுகல் நோய்: இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் பிராசிக்கால் வீதம் கலந்து, வேர்கள் நனையும்படி, செடியின் அடிப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

அறுவடை

நடவு செய்த 55-60 நாட்களில் முதல் அறுவடை தொடங்கும். ஐந்து நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்ய வேண்டும். சாதா இரகம் எனில், எக்டருக்கு 25-30 டன் காய்கள், வீரிய ஒட்டு இரகம் எனில், 45-50 டன் காய்கள் மகசூலாகக் கிடைக்கும்.


கத்தரி SATHISH G 2

முனைவர் கோ.சதீஷ், முனைவர் மு.மோகனலட்சுமி, மண்டல ஆராய்ச்சி நிலையம், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading