கேழ்வரகு சாகுபடி தொழில் நுட்பங்கள்!

கேழ்வரகு சாகுபடி kelvaragu

ணவே மருந்து என்பது, நம் முன்னோர்களின் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலையில் உள்ளோம். பழங் காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது உணவுப் பழக்கம் முழுவதும் மாறுபட்டு உள்ளதால், பலவகையான நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளோம்.

இதிலிருந்து விடுபட, கேழ்வரகை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், நீரிழிவு, இதய நோய் மற்றும் சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை நோய்களில் இருந்து விடுபடலாம். கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை உணவாகக் கொள்ளும்படி மருத்துவர்களும் பரிந்துரை செய்கின்றனர்.

மற்ற தானியங்களில் உள்ளதை விடக் கேழ்வரகில் கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியன நிறைய இருப்பதால், வேளாண் விஞ்ஞானிகளும் இதைப் பயிரிடும்படி பரிந்துரை செய்கின்றனர்.

பருவமழை நன்றாக இருந்தால், இறவையைக் காட்டிலும் மானாவாரியில் கேழ்வரகு அதிக இலாபத்தைத் தரும். ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்தில், மானாவாரியில் கேழ்வரகைப் பயிர் செய்யலாம்.

நிலம் தயாரித்தல்: செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலம், கேழ்வரகு சாகுபடிக்கு உகந்தது. நிலத்தை இரண்டு முறை நன்கு உழ வேண்டும். மூன்றாம் உழவில் தொழுவுரத்தை இட்டுப் பயிரிட்டால், கேழ்வரகு அதிக இலாபத்தைத் தரும். இயற்கை உரங்களை இட்டால், நிலத்தின் ஈரப்பதம் பல நாட்களுக்கு இருக்கும்.

நாற்றங்கால்: கேழ்வரகில் மகசூல் பெருக, தூர்கள் அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு, சரியான பயிர் இடைவெளியைக் கையாள வேண்டும். எனவே, நாற்று நடவு, இறவைக்கு மட்டுமின்றி, மானாவாரிக்கும் ஏற்றதாகும்.

நாற்று விட்டுப் பயிரிட, எக்டருக்கு 5 கிலோ விதைகள் தேவை. இந்த விதைகளை 12.5 சென்ட் நிலத்தில், அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப, பாத்திகளை அமைத்து, விதைகளை விதைத்து, நாற்றங்காலை உருவாக்க வேண்டும்.

நடவு: விதைத்து 17 முதல் 20 நாட்கள் வயதுள்ள நாற்றுகளை, குத்துக்கு 2-3 நாற்றுகள் வீதம், 7.5 செ.மீ இடைவெளியில் நடவு செய்யலாம். வளர்ச்சியை அதிகரிக்க, நுண்ணுயிர் உரங்களை இடலாம்.

உர நிர்வாகம்: எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரம் வீதம் எடுத்து, கடைசி உழவின் போது அடியுரமாக இட வேண்டும். பொதுவாக, மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யா விட்டால், தழை, மணி, சாம்பல் சத்தை, எக்டருக்கு முறையே 60:30:30 கிலோ வீதம் இட வேண்டும்.

விதைக்கும் போதே, மணி மற்றும் சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். தழைச்சத்தில் பாதியை அடியுரமாகவும், மீதியை இரு பாகமாகப் பிரித்து, விதைத்த 25-30 மற்றும் 40-45 நாளில், மேலுரமாக இட வேண்டும்.

பருவமழை சரியாக இல்லாத நிலையில், மீதமுள்ள பாதி தழைச்சத்தை, ஒரே தடவையில், மண்ணில் ஈரம் இருக்கும் போது மேலுரமாக இடலாம்.

நுண்ணுயிர் உரங்கள்: எக்டருக்குப் பத்துப் பொட்டலம், அதாவது, 2 கிலோ அசோபாஸ் உயிர் உரம் வீதம் எடுத்து, 25 கிலோ மண் மற்றும் மட்கிய தொழு உரத்தில் கலந்து நிலத்தில் தூவலாம்.

இறவையில், 5 பொட்டல அசோபாசை எடுத்து, 40 லிட்டர் நீரில் கலந்து ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளின் வேர்கள், 15-30 நிமிடம், மூழ்கும்படி நனைத்தும் நடவு செய்யலாம்.

களை நிர்வாகம்: விதைத்த அல்லது நாற்று நட்ட 18 ஆம் நாள், ஒரு களையும், 45 ஆம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும். அல்லது எக்டருக்கு 2 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது 3 லிட்டர் பென்டிமெத்தலின் களைக்கொல்லியை, 625 லிட்டர் நீரில் கலந்து, நாற்று நட்ட மூன்றாம் நாள், கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு: பூச்சிகள்: கேழ்வரகைப் பொதுவாகப் பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. எனினும், பருவ மாற்றத்துக்கு ஏற்ப வெட்டுப் புழுக்கள், தண்டுத் துளைப்பான்கள், சாறு உறிஞ்சிகள், இலைப்பேன், வேர் அசுவினி முதலிய பூச்சிகள் தாக்கலாம்.

வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 200 மி.லி. மாலத்தியான் 50 ஈசி மருந்தை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த, தூர்க்கட்டும் பருவத்தில், பூக்கும் பருவத்தில், மேலே கூறப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தையே தெளிக்கலாம்.

வேர் அசுவினியைக் கட்டுப்படுத்த, டைமித்தோயேட் 0.03 சதக் கலவையை, வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். சாறு உறிஞ்சிகளைக் கட்டுப்படுத்த, மேலே கூறப்பட்ட ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தலாம்.

நோய்கள்: கேழ்வரகை, குலை நோய், செம்புள்ளி நோய் மற்றும் தேமல் நோய் தாக்கும். குலைநோயைக் கட்டுப்படுத்த, 200 கிராம் பெவிஸ்டின் மருந்தை, நட்ட 20-45 நாட்களில் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

செம்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. எடிபென்பாஸ் அல்லது ஒரு கிலோ மேன்கோசெப் வீதம் எடுத்து, நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

தேமல் நோயைக் கட்டுப்படுத்த, நோயுற்ற பயிர்களை முதலில் அகற்ற வேண்டும். இது, தத்துப் பூச்சிகளால் பரவுவதால், அவற்றைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. டெமட்டான் அல்லது மோனோ குரோட்டோபாஸ் 0.05 சத மருந்தை, நோய் தோன்றியதும் ஒருமுறையும், அடுத்து, 20 நாட்கள் கழித்து ஒருமுறையும் தெளிக்க வேண்டும்.

அறுவடை மற்றும் சேமிப்பு: கதிர்கள் நன்கு காய்ந்து மணிகள் முற்றிய பிறகு, அறுவடை செய்ய வேண்டும். கதிர்களைக் களத்தில் காய வைத்து அடித்து, தானியத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். நன்றாகக் காய வைத்து, சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும்.

எண்ணற்ற வழிகள் இருந்த போதும், கீழ்க்கண்ட முறைகளைத் தவறாமல் கடைப்பிடித்தால் கட்டாயம் இலாபம் உண்டு.

+ பயிர் எண்ணிக்கை, அசோபாஸ் உயிர் உர விதை நேர்த்தி செய்தல்.

+ உயிர்ப் பூசணக் கொல்லியான சூடோமோனாசில் விதை நேர்த்தி செய்தல்.

+ அதிக இலாபம் மற்றும் மண்வளத்தைக் காக்கும் வகையில், 4:1 அல்லது 8:2 வீதம், கேழ்வரகுடன் துவரை அல்லது மொச்சையை ஊடுபயிராக இடுதல்.

+ நாற்றுகளை நட்ட 18 லிருந்து 25 நாட்களில் களையெடுத்தல்.

+ குலைநோய்த் தாக்காமல் இருக்க, சூடோமோனாசைத் தெளித்தல்.

+ 70-80 விழுக்காடு கதிர்கள் முற்றிய நிலையில் அறுவடை செய்தல்.

+ சுத்தமான களத்தில் கல் மற்றும் மண் கலக்காத வகையில் தானியத்தைப் பிரித்தெடுத்தல்.

+ பூசணம் தாக்காத தீவனத்துக்கு ஏற்ற வகையில், தாள்களை நன்கு காய வைத்து முறையாகச் சேமித்தல்.

அனைத்து விவசாயிகளும் ஆண்டுக்கு ஒருமுறையாவது, சிறுதானியத்தைப் பயிரிட்டு, உணவில் பயன்படுத்தி, உடல் நலம் காக்க வேண்டும்.

இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளில், சிறுதானியத் தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் விவசாயிகள் பங்கு கொண்டு, இந்நிறுவனம் வழங்கும் தொகுப்பு நிதியைப் பெற்றுப் பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு, இயக்குநர், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம், இராஜேந்திர நகர், ஐதராபாத் என்னும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி: 040- 2459 9382.


கேழ்வரகு சாகுபடி IMG 20240329 WA0160 1

மா.சௌந்தர்ராஜன், வேளாண்மை அலுவலர், நாமக்கல் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading