எண்ணெய்ப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

எண்ணெய்ப் பயிர்

ந்த மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்து வருகின்றன. இவற்றின் செயல்களால் பயிர்களுக்குப் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள், சீராகவும், தொடர்ந்தும் கிடைக்கின்றன.

பெருகி வரும் மக்கள் தொகையும், குறுகி வரும் விளைநிலப் பரப்பும், மகசூலைப் பெருக்க வேண்டிய பணியை விஞ்ஞானிகளிடம் ஏற்படுத்தி உள்ளன. உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் இரசாயனப் பொருள்களைத் தேவைக்கு மேலே இடுவதால், நிலம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசடைந்து உள்ளது.

இந்த மாசை, இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தான் சரி செய்ய வேண்டும். இதற்கு, இயற்கையுரம், பசுந்தாளுரம், இலை மட்குரம், நுண்ணுயிர் உரம், நார்க்கழிவு உரம் ஆகியன பயன்படும்.

மண்ணை மேம்படுத்தும் நுண்ணுயிர்கள், மண்ணிலும் இயற்கை உரத்திலும் உள்ள சத்துகளைக் கிரகித்து, கரைத்து, பயிருக்குத் தகுந்தாற் போல் மாற்றித் தரும் தன்மை மிக்கவை.

இவ்வகையில், ஒவ்வொரு சத்துக்கும், ஒவ்வொரு வகை நுண்ணுயிர்கள் உதவுகின்றன. இவற்றை ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்து, உயிர் உரங்களாகப் பயன்படுத்தி வருகிறோம்.

உயிர் உரமாகப் பயன்படும் பாக்டீரியா உருவாக்கப்படுவது இல்லை. இதை மண்ணிலிருந்து எடுத்து, வேதிக் கூறுகளை அறிந்து, செயற்திறனை மேம்படுத்தி, எண்ணிக்கையைப் பெருக்கி, நிலக்கரி அல்லது இலை மட்கு மண் அல்லது மண்புழு உரத்தில் தயாரித்து வெளியிடப் படுகிறது.

பயிருக்குத் தழைச்சத்தைத் தருவதில், பாக்டீரியா மற்றும் பயிர்களின் கூட்டு வாழ்க்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. தழைச்சத்தான நைட்ரஜனை, உயிர் வேதிக் கூறுகளால் மாற்றிப் பொருத்தத் தேவையான சக்தியை, பயிர்களிடம் இருந்து தான் பாக்டீரியாக்கள் பெறுகின்றன.

எனவே, பயிர்களுக்குப் பொருத்தமான பாக்டீரியாவை இணைக்கும் உயிர் வேதிக்கூறுகள், பயிர் வேர்களில் பாக்டீரியாவால் ஏற்படும் மாற்றங்கள், பயிர்கள் சுரக்கும் வேர்ச் சத்துகள், வளர்ச்சி ஊக்கிகள், அங்கக அமிலங்கள், பசை போன்ற மாவுச்சத்து ஆகியன ஒன்று சேர்ந்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வேர்ப்பகுதிக்கு ஈர்க்கின்றன.

இவை, இயற்கையாக, காலங்காலமாக, மண்ணில் நடந்து கொண்டே உள்ளன. இப்படி ஈர்க்கப்படும் பாக்டீரியாக்கள், வேர்ப் பகுதியில் பெருகுகின்றன. பிறகு, இவை கூட்டாகச் சேர்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தைப் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்கின்றன.

ரைசோபியம்

இது, பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலையில் கூட்டு வாழ்க்கை நடத்துகிறது. விதை முளைக்கும் போது வேரிழைகள் மூலமும், பக்க வேர்கள் கிளைக்கும் போது ஏற்படும் பிளவுகள் மூலமும் வேருக்குள் நுழைந்து, அங்கே முடிச்சுகளை உருவாக்குகிறது.நைட்ரஜனை நிலை நிறுத்துவதில் இந்த முடிச்சுகளின் இளஞ்சிவப்புத் திசுக்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

பயறு விதைகள் முளைத்துப் பத்து நாட்களில், செடிகளின் வேரில், கடுகளவில் குமிழ்கள் அல்லது பருக்கள் தோன்றும். பிறகு, இவை வளர்ந்து வேர் முடிச்சுகளாகும். பயிர்கள் பூக்கும் போது இந்த முடிச்சுகள் அதிகமாகும்.

இவற்றின் எண்ணிக்கை, பருமன் மற்றும் உருவ அமைப்பு, பயிருக்கு ஏற்ப வேறுபடும். பாசிப்பயறு, தட்டைப் பயற்றில் செடிக்கு 40, உளுந்தில் 20-40, நிலக்கடலையில் 100-170 வீதம் வேர் முடிச்சுகள் இருக்கும்.

பயறு வகைகளில் வேர் முடிச்சுகளை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அனைத்துக்கும் ரைசோபியம் என்றே பெயர். ஆனால், இதில் பல பிரிவுகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தாவரத்துடன் இணைந்து தான் வேர் முடிச்சுகளை உருவாக்கும்.

எனவே, ரைசோபிய உயிர் உரத்தை வாங்கும் போது, எந்தப் பயிருக்கு இடப் போகிறோம் என்பதைக் கூறி வாங்க வேண்டும். ரைசோபியத்தை விதை நேர்த்திக்குப் பயன்படுத்துவதே சிறந்த முறை.

ரைசோபிய நுண்ணுயிர், பயறுவகைப் பயிர்களின் வேர்களில் முடிச்சுகளை உருவாக்கி, அங்கே, காற்றிலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. ரைசோபியம், தழைச்சத்து உரத்தைச் சேமிக்கும். அத்துடன், 20 சத மகசூல் கூடுதலாகக் கிடைக்கவும் வகை செய்யும்.

பயிர் வேர்களில் இருந்து கசியும் வேர்க்கசிவு மற்றும் வேர் முடிச்சுகளில் இருந்து வெளியாகும் உயிர்ப் பொருள்கள், மண்வளத்தை மேம்படுத்தும். ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் பி.ஜி.பி.ஆர். நுண்ணுயிரைச் சேர்த்து இட்டால், ரைசோபியச் செயல் திறன் 7-10 சதம் கூடும்.

பாஸ்போபேக்டீரியா

பயிருக்கு இடும் மணிச்சத்தில் பெரும்பகுதி மண்ணில் ஏற்படும் இரசாயன நிகழ்வால், கரைக்க முடியா நிலைக்கு மாறி விடுகிறது. எனவே, பயிர்களால் மணிச்சத்தை முழுமையாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை.

ஆனால், பாஸ்போ பாக்டீரியச் செல்களில் சுரக்கும் அங்கக அமிலங்கள், இந்த மணிச்சத்தைக் கரைத்து, பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றித் தருகின்றன.
இதனால், பயிர்களில் பெருமளவில் மலர்கள் தோன்றி, விதை உற்பத்திக் கூடுகிறது. பாஸ்போ பாக்டீரியாவின் இந்த வேலையால், தேவையான மணிச்சத்து உரத்தில் 25 சதத்தைக் குறைத்தே இடலாம்.

இந்த பாஸ்போ பாக்டீரியாவை, தழைச்சத்தைத் தரவல்ல ரைசோபியம் மற்றும் அசோஸ் பயிரில்லத்தில் கலந்து இட்டால், இரண்டு நுண்ணுயிர் உரங்களின் செயல் திறன் அதிகமாகும்.

பாஸ்போ பாக்டீரியாவை இடுவதன் மூலம் கிடைக்கும் தானியங்களில், புரத அளவும் கூடுகிறது. மகசூலும் எக்டருக்கு, 200 முதல் 500 கிலோ வரை கூடுதலாகக் கிடைக்கிறது.

வேர் உட்பூசணம்

சைகோமைசிட்டிஸ் என்னும் பூசணப் வகுப்பைச் சேர்ந்த இப்பூசணம், மரம், செடி, கொடிகளுடன் இணைந்து கூட்டு வாழ்க்கை நடத்துவதால், பயிர்களுக்குப் பல வகைகளில் நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, சிறந்த முறையில் பயிர்களுக்கு மணிச்சத்துக் கிடைப்பது.

மேலும், சுண்ணாம்பு, செம்பு, தாமிரம், துத்தநாகம் போன்றவையும் கிடைக்கச் செய்கிறது. இதனுடன் கூட்டு வாழ்க்கை நடத்தும் பயிர்களில், வறட்சியைத் தாங்கும் தன்மை, நோயெதிர்ப்பு சக்தி மற்றும் நூற்புழுவை எதிர்கொள்ளும் திறன் கூடுகிறது. இதனால், மகசூலும் அதன் தரமும் உயர்வது தெரிய வந்துள்ளது.

பூசண வேரிழைகள்; இவை, பேரூட்ட, நுண்ணூட்டச் சுழற்சி மற்றும் உயிர்ச் சிதைவுகளில் ஏற்படும் சத்துப் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த வேரிழைப் பகுதியில் சுரக்கும் வேதிப் பொருள்களால், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. இப்பூசண இழைகளின் வலையமைப்பால் மண்ணின் கட்டமைப்பு சீரடைகிறது; மண்ணரிப்புத் தடுக்கப்படுகிறது; கரிமச்சத்து அதிகமாகிறது.

இந்த நுண்ணுயிர்கள்; தழைச் சத்துக்காக, அசோஸ் பயிரில்லம், அசட்டோ பாக்டர், ரைசோபியம், அசோலா, நீலப்பச்சை பாசி எனவும், மணிச் சத்துக்காக, பேசில்லஸ், சூடோமோனாஸ், வேர் உட்பூசணம் எனவும்,

பயிர்ப் பாதுகாப்புக்காக, பி.ஜி.பி.ஆர் எனவும், தனித்தனியாக அல்லது கூட்டாக உற்பத்தி செய்யப் படுகின்றன. இவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், ஆராய்ச்சி மையங்களில், வேளாண் துறையில் கிடைக்கின்றன.

கவனிக்க வேண்டியவை

பயன்படுத்தும் காலம் உள்ளதா என்பதைப் பார்த்து, நுண்ணுயிர் உரங்களை வாங்க வேண்டும். காலாவதி ஆவதற்குள் பயன்படுத்த வேண்டும். பயிர்களுக்கு உகந்த நுண்ணுயிர் உரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

உலர்ந்த மற்றும் குளிர்ச்சியான இடத்தில் சேமிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி, பூசணக்கொல்லி, களைக் கொல்லியில் கலக்கக் கூடாது. விதை நேர்த்தியின் போது, முதலில் பூசணக் கொல்லியையும், கடைசியில் நுண்ணுயிர் உத்தையும் பயன்படுத்த வேண்டும்.

நுண்ணுயிர் உரங்களை வெய்யிலுக்கு முன் அதிகாலை நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ஆறிய அரிசிக்கஞ்சி அல்லது வெல்லக் கரைசலில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இரசாயன உரங்களுடன் கலந்து இடக்கூடாது. நுண்ணுயிர் உரங்கள் மண்ணில் நன்கு செயல்பட, நிலத்தில் தொழுவுரம் மற்றும் அங்ககப் பொருள்களை அதிகளவில் இட வேண்டும்.


BIRUNTHAVATHI

முனைவர் இரா.பிருந்தாவதி, முனைவர் வே.விஜயகீதா, முனைவர் கா.பரமேஸ்வரி, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம் – 604 002, விழுப்புரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading